Wednesday 21 July, 2010

மாண்புமிகு முதல் அமைச்சர் முத்தமிழ் அறிஞர் ஐயன் கலைஞர் அவர்களுக்கு ஒரு வேண்டுகோள் விண்ணப்பம்


மாண்புமிகு முதல் அமைச்சர் முத்தமிழ் அறிஞர் ஐயன் கலைஞர் அவர்களுக்கு ஒரு வேண்டுகோள் விண்ணப்பம்


அனுப்புநர்: கலைஞர் தாசன்.
தமிழ் இல்லம்
தமிழ் தெரு,
தமிழுர்.
தமிழ்நாடு. அஇஈஉஊஏ
பெறுநர்: மாண்புமிகு முதல்வர் அவர்கள்
தமிழ் நெஞ்சம்,
தமிழ் கோட்டை
தமிழ்நாடு.அஇஈஉஊஎ.

பொருள்: ஐயா! என்னை தமிழர் என்று அங்கிகரிப்பீர்களாக

ஐயா!
சூன் மாதம் நடைப்பெற்ற செம்மொழி மாநாட்டுக்கு வருகைத் தராதவர்கள் தமிழரல்ல என்று குறிப்பிட்டிருந்தீர்கள். அதை கண்டு நான் அதிர்ந்து போனேன். நான் மாநாட்டிற்காக புறப்பட்டு சென்னை புறநகர் பேருந்து நிலையம் வந்த வேளையில் இயற்கை கூட தமிழுக்கு எதிரியாக ஆகி போனது. எனக்கு கடுமையான வயிற்று போக்கு ஏற்பட்டதால் பேருந்து நிலைய கழிப்பறையில் முன்று நான்கு மணி நேரம் கழிக்க நேரிட்டது. பிறகு தவழ்ந்தவாறே இரவு முழுவதும் பயணித்து வீடு வந்து சேர்தேன். வரத் தவறிய அல்லது வர மறுத்த மற்றவர்களை போல் என்னையும் எண்ணி விடாதீர்கள். எனது வாழ்நாள் முழுவதும் தமிழுக்காகவே வாழ்ந்து வருகிறேன். எனக்கு வேறு எந்த மொழியும் தெரியாது. தமிழ்நாட்டை விட்டு வேறெங்கும் வாழவும் வக்கற்றவன். ஆகையால் மாநாட்டிற்கு வர இயலாததற்கு உடன் நலம் சரியில்லை என்பதைத் தவிற வேறு காரணம் ஏதுமில்லை. ஆகையால் ஐயா, என்னை மன்னித்து, மாநாட்டுக்கு வந்த மற்ற தமிழரைப் போல் என்னையும் ஒரு தமிழர் என்று அங்கிகரிக்க வேண்டும் என்று தாழ்மையுடன் வேண்டிக் கொள்கிறேன்.
இப்படிக்கு
உண்மைத் தமிழன்
கலைஞர் தாசன்

(ஐயா! இந்த வேண்டுதல் கடித்ததுடன் தமிழுக்கு எதிரான சக்திகளைப் பற்றியும், உங்களது அரும் பெருமை பற்றியும் ஒரு நீண்ட கடிதத்தை இணைத்துள்ளேன்)
ஐயா! உங்களது ஆற்றலை அறியாத பேதைகளுக்கு நான் உரைப்பது என்னவென்றால், அவர்கள் பேதைகள் என்பதை விட வேறு என்ன கூற முடியும். தமிழரல்லாத அந்த தமிழ் விரோதிகள் இருந்து என்ன பயன். இந்த தமிழர் அல்லாத பீடைகள் உலகமெங்கும் விரவி கிடக்கிறார்கள். உங்களை வாழ்த்தாத தமிழர் அல்லாத தமிழ் விரோத நாட்டு தலைவர்களுக்கு எனது கண்டனத்தை தெரிவித்து கொள்கிறேன். குறிப்பாக தமிழர் என்ற சந்தேகத்திற்குரிய அமெரிக்க அதிபர் ஒபாமா, சீன தலைவர் ஊ சின்டோ, பிரஞ்சு, இங்கிலாந்து மற்றும் ஏனைய அனைத்து தமிழர் என்று சந்தேகத்திற்குரிய நாட்டு தலைவர்களுக்கும் எனது கண்டனத்தை தெரிவித்து கொள்கிறேன்.


கி.மு 50000- வது நூற்றாண்டு முன் வாழ்ந்த தமிழ் புலவனின் வழித் தோன்றலான இக்காலக் கவிஞர் உரைத்தது போல் நீர் தான் தமிழ். எந்நாளும் நீ தான் தமிழ் மாமன்னன்.
“தமிழா! தமிழா! நாளை உன் நாளே
தமிழா! தமிழா! நாளும் உன் நாளே!”
என்று பாடிய மகா கவிஞர் தமிழின் உச்சம். உங்களின் மிச்சம். இதைப் போல் உங்களை புகழாத சொச்சம் வெறும் எச்சம். மாநாட்டுக்கு வந்திருந்த உண்மை தமிழர்கள் தமிழே ஆன உங்களை புகழ் பாடினர். அதை கண்டு இங்கு வாழும் ஈனர்களுக்கோ ஆத்திரம். “அனைத்து சாலைகளும் கோவையை நோக்கியே,” என்ற நிலையில் மாநாட்டுக்கு வராமல் இருந்தவர்களை மதுரையில் இன்னும் உள்ள ஆதி கழுமரத்தில் ஏற்ற வேண்டும்.
தமிழ்நாட்டில் உள்ளவர்கள் தான் இப்படி என்றால், இலங்கையில் வாழ்பவர்களை என்னவென்று கூறுவது. தமிழ் நெஞ்சம் சிவதம்பி தவிற, முள்வேலியில் வசந்த வாழ்வு கொண்டிருக்கும் சந்தேகத்திற்குரிய தமிழர்கள் வரவில்லை. உங்களது மாநாட்டு வர வக்கற்று இறுதிகட்ட போரில் மடிந்து போன தமிழர் அல்லத மற்றும் தமிழரா? என்று சந்தேகத்திற்குரியவர்களையும் நான் கண்டிக்கிறேன். இதை நான் கூறுவதற்கு காரணம், அயராது தமிழுக்காகவே உழைத்து கொண்டிருக்கும் உங்களுக்கு துரோகிகளையும், தமிழ் எதிரிகளையும் சந்தேகத்திற்கு இடமின்றி இனங்காட்ட வேண்டிய கடமை எனக்கு உண்டு.
ஆகையால் தலைவரே! மாநாட்டுக்கு வந்திருந்த 10 லட்சம்(சுமார்) பேர்களும் சந்தேகத்திற்கு இடமில்லாமல் தமிழரே என்பது எனது திண்ணம். குறிப்பாக மாநாட்டுக்கு வந்திருந்த தமிழ் இந்திய குடியரசுத் தலைவர், மற்றும் தமிழ் இந்திய நிதியமைச்சர் அவர்களை பாராட்டுகிறேன்(இவர்கள் பெயர்கள் குறித்து கி.மு.45002-ம் நூற்றாண்டில் வாழ்ந்த செக்கோசுலோவிக்கியா தமிழர் என்று சந்தேகமற்ற அறிஞரும், 45001-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த தமிழர் என்று சந்தேகமற்ற உகாண்ட தமிழ் அறிஞரும் அவர்களது பெயர்கள் குறிந்து சந்தேகத்தினால் அந்த சர்ச்சை வேண்டாம் என்று இருவரின் பெயர்களையும் நான் குறிப்பிட வில்லை) .
உலக தமிழர்களின் மக்கள் தொகை
(தமிழர் என்று சந்தேகத்திற்கு உட்படாமல் ): 6,856,600,000 (சுமார்)
தமிழ்நாட்டின் உள்ள தமிழர்களின்
மக்கள் தொகை
(தமிழர்கள் என்று சந்தேகத்திற்கு உட்பட்டு) 66,396,000(சுமார்)
மாநாட்டில் பங்கு கொண்ட
உண்மை தமிழர்கள் 1,000,000(சுமார்)+1
கடுமையான உடல் நிலை பாதிப்பினால்
மாநாட்டிற்கு வரத் தவரிய தமிழர்
(உங்கள் அங்கீகாரத்திற்காக காத்திருப்பு) 1

ஆக மொத்தம் உலகில் உள்ள சந்தேகத்திற்கு
இடமின்றி தமிழர்கள் : 1,000,001(சந்தேகத்திற்கு
இடமின்றி நிதர்சனம்)

தலைவா நான் மாநாட்டுக்கு வர இயலவில்லை என்றாலும் உம்மை பற்றி நான் புகழுறை அளிக்காவிட்டால் எனது பிறவிக் கடன் தீராது.
தலைவா! இந்த கவிமழை:
இதோ புடிச்சிக்கோ:
தமிழ் மன்னவா
நீ சாணக்கியனான தமிழன்
தமிழின் கனி
மொழியில் செம்மொழி

தலைவா நீ
தேசத்தை பாதுகாத்த
தேச பாதுகாப்பு சட்டம்.

தலைவா நீ
சீனர்களுக்கு மாவோஸ்ட்
சிகரத்தில் எவரஸ்ட்
போயஸ் கார்டனுக்கு நீ டேரர்ரிஸ்ட்,

தலைவா நீ
மகா கவி
உனக்கு அளிக்கப்படாத
நோபல் பரிசு,
இனி நோபல் பரிசு
எவருக்கும் அளிக்காது
நோ பீஸ்(அமைதி).

இலங்கையில் புலியாம்
இங்கே பகையாளியாம்
நம் பெண் சிங்கம்
சோனியா இருக்கையில்
ஏன் பீதியாம்?

உலகில் ராஜாவாம் உயரியம்
2-ஜி ஸ்பெட்ரம்
இனி தமிழன் தான்
முதல் தரம்.

தலைவா நீ, தமிழ் அங்காடி
உனக்கு போட்டியா
ரிலையன்ஸ் பல்பொருள் அங்காடி.

தலைவா! இன்னும் நிறைய எழுத என் நெஞ்சம் கொள்ள கொள்கிறது. எனினும் கவிஞர் வாலி அவர்கள் இதை விட அழகாக இன்னும் புகழ் பாடுவார் என்பதால் இந்த பொடியன் விழகிக் கொள்கிறேன்.
உலகில் உள்ள 600 கோடிக்கும் மேற்பட்ட தமிழர்களின்(சந்தேகத்திற்கு இடமின்றி, கி.மு. 70000 ஆண்டுகளுக்கு முன் பிறந்த எகிப்திய அரசரும் தமிழர் என்று சந்தேகத்திற்கு இடமில்லாத ஆராய்ச்சி குறிப்பிடுவதால்) ஒரே தலைவன் நீர் தான். உமது பெருமை குறித்து நமக்கு புதிதாக கிடைத்த செப்பு பட்டையத்தை ஆய்தல் வேண்டும். இந்த மாநாட்டிற்கு எதிராக தமிழரல்லாதவர்கள் எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள். அதற்காக அவர்கள் கூறும் காரணங்கள் இலங்கையில் தமிழர் பல்லாயிரம் பேர் கொல்லப்பட்டார்களாம். நான் கேட்கிறேன்.
இலங்கையில் கொல்லப்பட்டவர்கள் தமிழர் என்பதற்கு என்ன ஆதாரம் உள்ளது. என்றாவது இந்தி எதிர்ப்பு போராட்டத்திற்காக மணமேடையில் இருந்து புறப்பட்டு வந்தார்களா?. ரயில் தண்டவாளத்தில் தலை வைத்து படுத்திருக்கிறார்களா? அல்லது, பாளையம் கோட்டை சிறையில் பாம்புகள் மத்தியில் சிறைப்பட்டிருக்கிறார்கள், அல்லது உங்களுக்கு மாமானா, மச்சானா அவர்கள், மானங்கெட்டவர்கள். இப்படி எதும் செய்யாதவர்களை எப்படி தமிழர்கள் என்று ஏற்க வேண்டும். குறைந்த பட்சம் தி.மு.க. வுக்கு ஓட்டாவது அளித்திருக்கிறார்களா? அல்லது கடந்த ஆட்சியல் ஒரு நள்ளிரவில் நீங்கள் கைது செய்யப்பட்ட போது அதிர்ச்சியில் இறந்து போன பல்லாயிரக்கணக்கானவர்களில் ஒரு சிலராவது இவர்களா? ஆகையால் இவர்கள் தமிழர் ரத்தம் இல்லை என்பது புலனாகிறது. இப்படியான நிலையில் உங்களது புகழை கண்டே இவர்கள் இவ்வாறு கூக்குரலிடுகிறார்கள்.
அதே போல் செம்மொழியாக நம் தமிழ் மொழி அங்கீகாரம் பெற்றதற்கு ஏதோ தமிழ் மொழியின் சிறப்பு என்று கூறுகிறார்கள். இன்னும் சிலர் செம்மொழி குறித்து வேறு பல அறிஞர்கள் ஒரு நூற்றாண்டு முன்னரே கோரிக்கை விடுத்ததாக கூறுகிறார்கள். அவர்களை யார் தமிழ் செம்மொழி ஆவதற்கு முன்னரே கோரிக்கை விடுக்கச் சொன்னது. ஐயா, நீங்கள் தான் தமிழ். அது எப்படி நீங்கள் பிறப்பதற்கு முன்னரே தமிழ் சிறப்பனாது என்று கருத்து தெரிவிக்க முடியும். ஆகையால் அவர்களும் சந்தேகத்திற்கு உரிய தமிழர்களே!
அதே போல் மாநாட்டுக்கு வந்த தமிழர்கள் மிகுதியாக மது அருந்தியதாக கூறுகிறார்கள். தமிழகத்தில் விற்கப்பபடும் மதுவை தமிழர் அருந்தாமல் வேறு யாரை அருந்த அனுமதிக்க முடியும். அண்டை மாநிலங்கள் நமக்கு நீர் தராமல் தடுக்கையில் நாம் ஏன் மற்ற மாநிலத்தார்களுக்கு மது கொடுக்க வேண்டும். ஆகையால் தமிழரே அருந்த வேண்டும். அதே போல் மாநாட்டுக்கு வந்தவர்கள் உண்மையான தமிழ் குடிகள், திராவிட குடிகள் என்பதை வலிமையுடன் கூறி கொள்ள கடமை பெற்றுள்ளேன்.
அதே போல் தாங்கள் எழுதிய மாநாட்டு பாடலை சிலர் குறை கூறுகிறார்கள். நீங்கள் இப்படலை எழுதியதற்காக, கவிப்பேரசர் வைரமுத்துவைப் போல் சிறந்த பாடலாசிரியருக்கான விருதையா கோரவாப் போகிறீர்கள்? அல்லது விற்பனை உரிமையாத்தான் கோரப்போகிறீர்கள்? இலவசமா செய்தது தானே. தமிழனுக்காக வீட்டை தந்தீர்கள், உங்கள் மக்களை தந்தீர்கள், உங்கள் ஆற்றலை தந்தீர்கள், உங்கள் தமிழை தந்தீர்கள், அதே போல் தான் பாடலையும் தந்தீர்கள். தமிழ் இந்திய குடியரசுத் தலைவி பொருள் உணர்ந்து அப்படலை புகழ்ந்தாரே, அதுக் கூடவா இவர்களுக்கு புரியவில்லை.
தஞ்சையில் நடந்த கடந்த தமிழ் மாநாட்டின் போது “ தமிழ் இங்கிருக்க அங்கே ஏன் வீணாக மாநாடு,” என்று அன்று குமுறிய உலக மகா கவிஞர் அப்துல் ரகுமான். இன்று தமிழுக்காக இப்படியான மாநாட்டில் தனது பிறவிப்பயனை அடைந்து விட்டார். உலகத் தமிழர்களின் தலைவர் நீங்கள் என்கிறார் சிவத்தம்பி. நாளை ராஜ பக்ஷே அழைத்தால் கூட அந்த பட்டத்தை திருப்பி போட்டு விடுவார். இப்படியாக தமிழாக விழங்கும் ஐயா! கலைஞர் அவர்களே! உங்கள் ஆற்றலை பல்லாயிரம் பக்கங்கள் நீட்டிக் கொண்டே போகலாம். இருப்பினும் இதை மறுக்கும் ஈனர்கள் இருக்கிறார்கள் என்பது தான் மனம் நொந்து போகிறது.
தலைவரே! இப்படியாக நான் கூறுவதன் மூலம் தமிழர் அல்லாத கொசுக்கள் கடிக்கக்கூடும், தமிழர் அல்லாத ஈக்கள் மொய்க்கக்கூடம், தமிழரல்லாத ரவுடிகள் எனது வாயிலேயே குத்தக்கூடும், இருப்பினும் உங்களது கொடையின் கீழ் வாழும் சாதாரண தமிழன்(அங்கீகாரத்திற்காக காத்திருப்பு) என்பதலும், உங்களது பாதுகாப்பு இருப்பதாலும் நான் தைரியமாக இதை எழுதுகிறேன்.

Sunday 16 May, 2010

கிம் கி டுக் நேர்காணல்


இழிந்தவன் திரைப்படம் குறித்து கிம் கி டுக் அளித்த நேர்காணல்: பகுதி: 1

கேள்வி: நீங்களே ஒரு முறை கூறியிருக்கிறீர்கள் உங்களது படங்கள் “வெறுப்பு” என்ற நிலையிலிருந்து தான் தொடங்குகிறது என்று. இப்போது உங்களது புதிய படமான இழிந்தவன்-ல் எத்தகைய அணுமுறையை கையாண்டிருக்கிறீர்கள்?

கிம் கி-டுக்: “வெறுப்பு” என்ற வார்த்தையை நான் பலமுறை பயன்படுத்திருக்கிறேன் என்பது உண்மை தான். ஆனால் நீங்கள் அந்த வார்த்தையை உள்ளடத்தைத் தாண்டி நினைத்து விடுவீர்கள் என்று நான் எண்ண வில்லை. நான் கூறும் “வெறுப்பு” குறிப்பிட்ட ஒன்றை பற்றியோ, ஒரு பொருள் பற்றியோ அல்லது ஒரு தனி நபர் பற்றியோ அல்ல. நான் கூறும் “வெறுப்பு” எனது வாழ்க்கையில் கிடைத்த, வாழ்ந்து கொண்டிருக்கும் வாழ்க்கையிலிருந்து பெற்றது. அதன் முலம் நான் கண்டுணர்ந்ததை திரைப்படமாக எடுக்கிறேன். சில சமயங்களில் எனக்கு புலப்படாதவைகளை ஈடுகட்டுவதற்காக படங்களை எடுக்கிறேன். ஆகையால் “வெறுப்பு” என்று கூறுவதை காட்டிலும் “புரிந்து கொள்ளாமை” என்றே பேசலாம்.

கேள்வி: இழிந்தவன் படத்தின் மூலம் தாங்கள் இந்த உலகத்தில் எத்தகையதை கண்டறிய முயன்றுள்ளீர்கள்டீர்கள்?

கிம் கி-டுக்: எனக்குள்ளே தொனித்து கொண்டிருக்கும் கேள்வி என்னவென்றால், ஒவ்வொருவரும் பிறக்கும் போது ஒரே அந்தஸ்த்துடன் ஏற்றத் தாழ்வு ஏதும் இன்றி பிறக்கிறோம். ஆனால் வளர்ந்ததும் ஏற்றத் தாழ்வுகள் உருவாகி நிலைக்கு தகுந்தவாறு வகைப்படுத்தி தரம் பிரித்து பார்க்கிறோம். நாம் ஒருவரை உருவத்தையும் தோற்றத்தையும் கொண்டு ஏன் மதிப்பட வேண்டும்? நம்மிடம் பணம் இருக்கிறதோ இல்லையோ எதற்காக ஒருவரை பணத்தை கொண்டு ஏன் முக்கியத்துவம் தருகிறோம்? அத்தகையவர் அழகுடனோ அல்லது அவலட்சணத்தோடு இருந்தாலும் நாம் பொருட்படுவதில்லை. இத்தகைய தகுதி வரையறை நமது பிறப்புக்குப் பின் திணிக்கப்பட்டதாகும். இதன் அடிப்படையில் சமூக மற்றும் பொருளாதார ஏற்றத்தாழ்வுகளுக்கு ஏற்ப நாம் ஒவ்வொருவரும் தரம் பிரிக்கப்பட்டு வகைப்படுத்தப்பட்டிருக்கிறோம். இதனால் ஒருவரோடு மற்றொருவர் இணைந்து வாழ வகை வழியின்றி போகிறது. இதனால் நான் கேட்பதெல்லாம் இத்தகைய ஏற்றத் தாழ்வுடைய சமூக அடுக்குகள் உலகத்தோடு கலந்து வேறுபாடின்றி இருக்க வாய்ப்பில்லையா என்று தான்.

கேள்வி:
இந்த கேள்விக்கு பதிலை கண்டுப்பிடித்து விட்டீர்களா?

கிம் கி-டுக்: நான் கேட்பதெல்லாம் மனிதர்களை ஒருவர் மற்றொருவரை மதிக்க வேண்டும் என்பதே, தோற்றம் கொண்டோ அல்லது பணத்தினாலோ அல்லது வகுப்பு போதத்தினாலோ துவேஷம் செய்ய கூடாது. அது தான் எனது பதிலும் கூட. அத்தகையதைத் தான் பார்வையாளர்களிடம் முன்னிலைப்படுத்துகிறேன். எனது கேள்வியை அவர்களிடமே வைக்கிறேன். ஒவ்வொருவரும் தங்களுக்கு ஏற்றாற் போல் விடையை கண்டுப்பிடித்து விடுவார்கள்.

கேள்வி:
தற்போதைய படமான இழிந்தவன்(Bad Guy)- னில் முக்கிய கதாபாத்திரமான ஹாங்-ஜி ஒரு காமத் தரகன். விபச்சார விடுதிகளுக்கு பெண்களை கவர்ந்து செல்பவன். அவனது மொழி மௌனம். எந்த விதத்திலும் தனது உணர்வை வெளிக்காட்ட இயலாதவனாவும், தனது ஒரே மொழி வன்செயல் என்பதாகவும் உள்ளான். அவனது மௌனத்திற்கு காரணம் தான் என்ன?


மந்திரச்சிமிழ் இதழில்.......

Wednesday 14 April, 2010

ஃபெத்திக் அக்கின்


ஃபெத்திக் அக்கின்- இருவேறு தேசங்களிலிருந்து......


“திரைப்படத்தின் தொடக்கத்திலேயே கேளிக்கையை
புகுத்தும் பட்சத்தில் அது நாடகத்தன்மையை அடைகிறது
ஏனெனில் பார்வையாளர்களை அது சிரிக்க வைக்கும்.
அது ஏதோவொரு வகையில் அவர்களின் ஆன்மாவை
விழிக்கச் செய்கிறது. அவ்வாறு அவர்களின் ஆன்மாவை மீட்சிக்கொள்ள செய்வதை விட அவர்களை கத்தியால்
குத்துவதே மேல்”.
-ஃபெத்திக் அக்கின்-


காலகட்டங்கள் மாறுகின்றன. புது வகை கதைசொல்லல் சினிமாவிலும் அவசியமாகிறது. துருக்கியில் விட்டுச் சென்ற தனது சிறகுகளை கேமராக் கண்களின் வாயிலாக தேடும் ஃபெத்திக் அக்கின் 1973 ஆம் ஆண்டு ஜெர்மனியில் உள்ள ஹாம்பெர்கில் துருக்கிய இஸ்லாமிய தாய் தந்தையர்களுக்கு மகனாக பிறந்தார். ஹாம்பெர்க் கல்லூரியில் காட்சி வழி தகவல் தொடர்பியல் (Visual Comunication) பயின்று கொண்டிருக்கையில் 1995 ஆம் ஆண்டு sensin என்ற குறும்படத்தை எழுதி இயக்கினார். அந்த குறும்படம் மிகுந்த பாராட்டைப்பெற்றதோடு அல்லாமல் ஹாம்பெர்க் சர்வதேச குறும்பட விழாவிலும் பரிசுபெற்றது. அதனைத் தொடர்ந்து 1996 ஆம் ஆண்டில் கீமீமீபீ என்ற குறும்படத்தை எழுதி இயக்கினார். ஃபெய்த் அக்கிம்’மின் முதல் முழுநீள திரைப்படமான ரிஹிஸிஞீ ஹிழிஞி ஷிசிபிவிணிஸிஞீலிளிஷி 1998ல் வெளியானது. இந்தப் படத்தின் மூலம் அவருக்கு சிறந்த இளம் இயக்குநருக்கான வெண்கலப்பதக்கம் கிடைத்தது. ஜெர்மானிய மெக்ஸக்கோ நடிகையான மாணிக் ஓபர்முல்லர்’ரை 2004 ஆம் ஆண்டு மணந்துகொண்டார் ஃபெய்த் அக்கின்.
ஃபெத்திக் அக்கினுக்கு சினிமா கலைஞனாக மட்டுமின்றி துணிச்சலான அரசியல் நோக்கமும் கொண்டவர். அவருடைய சில செயல்பாடுகள் சர்ச்சைகளைக்கூட உருவாக்கின. ஜெர்மனியில் நாசிகள் மேற்கொண்ட யூத இன பேரழிப்பான ஹாலோகாஸ்ட்’டை சிறுமைப்படுத்தியதற்காகவும், அவர் அணிந்திருந்த டி-ஷேர்ட்டில் அமெரிக்காவின் முன்னாள் அதிபர் புஷ் (ஙிusலீ) பெயரில் உள்ள “s” என்ற எழுத்துக்குப் பதிலாக நாசிகளின் ஸ்வத்திக் குறியை இட்டதற்காகவும் ஜெர்மன் போலீசார் அவர்மீது விசாணையை மேற்கொண்டனர். அதுகுறித்து அவர் விளக்கம் அளிக்கையில் “நான் இவ்வாறு ஸ்வத்திக் குறியிட்டது ஆத்திரமூட்டுவதற்காக அல்ல. புஷ்’ஷின் கொள்கை ஹிட்லரின் ஆட்சியைப்போலிருப்பதை வலியுறுத்தத்தவே. புஷ்’ஷின் ஆட்சியில் ஹாலிவுட்டு கூட பென்டகனின் கைப்பாவையாக மாறியுள்ளது. கவுன்டமாலா சிறை சித்ரவதைகளை இயல்பான சம்பவங்களைப்போல் ஹாலிவுட் படங்கள் சித்தரித்தன. புஷ்’ஷின் அரசாட்சி மூன்றாம் உலக போருக்கு உலகத்தை இட்டுச் செல்லக் கூடும் என்பதை வலியுறுத்தத்தான் நான் அவ்வாறு செய்தேன்,” என்று குறிப்பட்ட அக்கின், “புஷ் ஒரு பாசிஸ்ட் என்பதாகவே நான் கருதுகிறேன்,” என்றார்.
தனது முஸ்லிம் என்ற அடையாளத்தை எந்தச் சூழ்நிலையிலும் ஃபெத்திக் அக்கின் வெளிப்படுத்த தயங்க வில்லை. கடந்த நவம்பர் 2009 ஆம் ஆண்டு சுவிட்சர்லாந்து அரசு இஸ்லாமிய கலாச்சாரத்தைப் பிரதிபலிக்கும் வகையில் மீனோரேட்ஸ்(விவீஸீணீக்ஷீமீt)'ல் உள்ள கட்டடக் கலைக்கு தடைவிதிக்க பொது வாக்கெடுப்பு நடத்தியது. அந்த வாக்கெடுப்பு அமோக ஆதரவுடன் வெற்றிப் பெற்றது. அதற்கு தனது கடுமையான அதிருப்தியை வெளியிட்ட ஃபெத்திக் அக்கின், “ இத்தகைய பொது வாக்கெடுப்பு மனிதாபிமானமும், சகிப்புத் தன்மையும் அற்றது. வேற்று கலாச்சார, மதம், இனம் கொண்ட மக்கள் மீது தொடுக்கப்பட்ட தாக்குதலாகவே நான் கருதுகிறேன். அதேவேளையில், இஸ்லாமியப் பெற்றோருக்கு மகனாக பிறந்த என்னால் மீனோரேட்ஸ்’ஸை இஸ்லாமிய மத அரசியலின் அடையாளமாக பார்க்க முடியவில்லை" என்றார். மீனோரேட்ஸ்’ஸை வழிப்பாட்டுக்குரிய கட்டடமாகவே தான் கருதுவதாகவும், சுவிட்சர்லாந்து அரசாங்கத்தின் செயல் தன்னை பாதித்திருப்பாகவும் தெரிவித்த அவர் இனிமேல் சுவிட்சர்லாந்து செல்லப் போவதில்லை என்றும், தனது சமீபத்திய படமான ஜிலீமீ ஷிஷீuறீ ரிவீtநீலீமீஸீ யை அந்நாட்டில் திரையிடப்போவதில்லை என்றும் தெரிவித்ததோடு, இஸ்லாமியர்கள் அனைவரும் சுவிஸ் வங்கியில் சேமித்திருக்கும் பணம் முழுவதையும் உடனே திரும்ப பெறவேண்டுமென்றும் வேண்டுகோள் விடுத்திருக்கிறார்.

அவரது திரைப்படங்கள் அனைத்தும் துருக்கியின் கலாச்சாரப் பின்னணியுடன் படமெடுக்கப்பட்டன. குறிப்பாக ஜெர்மனில் வாழும் இளைஞர்கள் அனுபவிக்கும் இனவாத பிரச்சனைகளைப் பற்றியவை. அவரது முதல் படமான ரிஹிஸிஞீ ஹிழிஞி ஷிசிபிவிணிஸிஞீலிளிஷி ல் வரும் கேப்ரியல் என்ற துருக்கிய இளைஞன், பாபி என்ற செர்பிய இளைஞன், கோஸ்டா என்ற கிரேக்க இளைஞன் ஆகியோர் நண்பர்கள். இவர்கள் மூவரும் குழுவாக ஹாம்பெர்க் அருகே உள்ள மாவட்டத்தில் களவு போன்ற சிற்சில குற்றங்களை செய்து வருபவர்கள். அவரது முக்கிய திரைப்படமான சொர்க்கத்தின் விளிம்பு(ஜிலீமீ ணிபீரீமீ ளியீ ஜிலீமீ பிமீணீஸ்மீஸீ) இரு நாடுகளில் நடைபெறும் நிகழ்வுகளைக் கொண்டு படமெடுக்கப்பட்டதாகும். அப்படத்தில் துருக்கிய குடியேறிகள் அதிகமாக உள்ள ஜெர்மனில் ஃப்ரிமென் நகரத்தில் கதையின் முதல் பகுதி தொடங்குகிறது. மனைவியை இழந்த ஓய்வு பெற்ற அலி கூட ஒரு ஜெர்மன் வாழ் துருக்கியர் தான். தனது தனிமையை தனிக்க விபச்சாரிகள் வீதிக்குள் இறங்கி நடக்கிறார். எஸ்டெர் என்ற விபச்சாரியை அடைகிறார். அவர்களது தொடர்பு தொடர்கின்றது. இதனிடைய துருக்கிய இளைஞர்குழு, அவள் ஒரு துருக்கியர் என்பதை உணர்ந்து கொண்டு விபச்சாரத்தில் ஈடுபடுவதை நிறுத்தும் படி வலியுறுத்தி வருகிறது. இப்படியான நிலையில் அவள் தனது விபச்சாரத்தை தொடர முடியாத நிலை ஏற்படுகிறது. ஒருமுறை எஸ்தெரை தன்னோடு வந்து வசிக்கும்படி அழைக்கிறார் அலி. தான் ஒண்டியாக இருப்பதாகவும் தனக்கென்று ஒரு பெண்ணை தேடிக்கொண்டிருப்பதாகவும் கூறுகிறார் அவர். இந்த விபச்சாரம் மூலமாக அவளுக்கு கிடைக்கும் தொகைக்கு ஈடான தொகையை தனது ஓய்வூதியத்திலிருந்து தருவதாகவும் கூறுகிறார். அதை மறுத்து விடுகிறாள் எஸ்தெர். இருப்பினும் தனது செல் எண்ணை தந்துவிட்டுச் செல்கிறார் அலி. பிறகு துருக்கிய இளைஞர்களின் மிரட்டலால் அலியை தேடி வருகிறாள் எஸ்டெர். அப்போது அலி குதிரைப் பந்தய அரங்கில் அமர்ந்து மது அருந்திகொண்டிருக்கிறார். “நீங்கள் அன்று கூறியது நிஜமானது தானா?” என்கிறாள் எஸ்டெர்.
“ஆம், உனக்கு மாதம் எவ்வளவு கிடைக்கிறது?” என்கிறார் அலி.
அவளோ, அந்த நாட்டின் ரூபாயின்படி 3000 ஆயிரம் என்கிறாள். நான் போதுமான அளவு ஓய்வூதியம் வாங்குகிறேன். அதனோடு வங்கியிலும் பணம் வைத்துள்ளேன். நிலமும், சில சொத்துகளும் வைத்துள்ளேன். பணநெருக்கடி ஏற்பட்டால், பேராசியராக இருக்கும் எனது மகனிடம் வாங்கி கொள்ளலாம். அவன் நன்றாக சம்பாதிக்கிறான். அவன் நல்லவன்உதவுவான் என்கிறார்.
ஒரு நாள் அலியும் அவரது மகன் நிஜாத்'தும் எஸ்டெரோடு இரவு உணவு சாப்பிட்டுக் கொண்டிருக்கிறார்கள். அலி அதிகமாக மது அருந்தி விடுகிறார். அவரை படுக்கையில் படுக்க வைத்துவிட்டு வருகிறான் நிஜாத். அதன் பிறகு எஸ்டெரோடு உரையாடுகிறான் நிஜாத்.
“எனது தந்தையை உங்களுக்கு எப்படித் தெரியும்?” என்று அவளிடம் கேட்கிறான்.
“அவர் என்னிடம் வருவார்” என்று எதார்த்தமாகவே எஸ்டெர் கூறுகிறாள்.
“அப்படியென்றால்...”
“உங்களிடம் ஏதும் கூறவில்லையா உங்கள் தந்தை”“இல்லை”
“நான் அனைவரையும் எளிதில் அணுகி இன்பம் தருபவள்”
“அப்படியென்றால்,”“ஆம், நான் ஒரு விபச்சாரி”
அப்போது எஸ்டெரை அலி அழைக்கிறார். அவள் செல்கிறாள். சிறிது நேரத்திற்கெல்லாம் நிஜாத் என்று எஸ்தெர் கூக்குரலிடுகிறாள். அலி படுக்கையில் மூர்ச்சை ஆகி கிடக்கிறார். அலிக்கு மாரடைப்பு ஏற்பட்டு விடுகிறது. மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகிறார்.
உடல் தேர்ந்து வீட்டிற்கு வரும் அலி, எஸ்டெரை உறவு கொள்ள கட்டாயப்படுத்துகிறார். அவள் மறுக்கிறாள். கன்னத்தில் அறைகையில் மயங்கி விழும் எஸ்தெர், இறந்து விடுகிறாள். அலி கதறுகிறார். துருக்கியில் படித்துகொண்டிருக்கும் தன் மகளுக்காக விபச்சாரம் செய்து கொண்டிருந்த எஸ்டெரின் கதை முடிவடைகிறது. முன்னதாக தனது கதையை நிஜாத்திடம் கூறிய எஸ்டெர், தான் ஒரு விபச்சாரி என்று மகளுக்கு தெரியாது என்றும், அவளிடம் தான் ஒரு செருப்புக்கடையில் பணிபுரிவதாக கூறியிருப்பதாகவும் நிஜாத்திடம் கூறியிருந்தாள். அவளை படிக்கவைப்பதுதான் தனது நோக்கமென்று கூறியிருந்தாள்.
அடுத்தக் கட்டமாக படம் துருக்கியை நோக்கி நகர்கிறது. எஸ்டெரின் உயிரற்ற உடல் துருக்கிக்குக் கொண்டுசெல்லப்படுகிறது. அவரது உறவினர்களோடு சேர்ந்து நிஜாத்தும் அவளது உடலை நல்லடக்கம் செய்கிறார். எஸ்டெரின் மகளான ஆய்டென் பற்றிய விவரங்கள் அவளது உறவினர்களுக்கே தெரியாத நிலை. பல மாதங்களுக்கு முன்னரே அவள் தங்களிடமிருந்து தொடர்பை இழந்து விட்டதாக கூறுகிறார்கள். அவளது குடும்ப புகைப்பட ஆல்பம் மட்டுமே எஞ்சி இருக்கிறது. அதில் கூட அவளது சமீபத்திய புகைப்படம் ஏதும் இல்லை. அவளது சிறு வயது படங்கள் மட்டுமே உள்ளன. ஆல்பத்தில் உள்ள அவளது தாய் எஸ்டெரின் புகைப்படம் ஒன்றை தன்வசம் எடுத்துக்கொள்கிறான் நிஜாத்.
ஆய்டெனை தேடும் படலத்தைத் தொடர்கிறான் நிஜாத். இதனிடையே படத்தின் அடுத்த கட்டம் லாட்ஸ்’ஸின் மரணம் என்ற பகுதிக்குள் செல்கிறது. இருவேறு கதைகள். தேடுதல் என்ற அம்சம் பிரதானமாகிறது. படத்தின் போக்கு என்பது குறுக்கு வெட்டாக ஒரு நிகழ்வு ஜெர்மனியிலும் மற்றொரு நிகழ்வு துருக்கியிலுமாக மாறி மாறி தேடுதல் என்ற ஒன்றோடு சம்பவங்கள் கோர்க்கப்படுகிறது. “லாட்டி’யின் மரணம்,” பகுதியின் தொடக்கத்தில் பெரும் திரளான மக்கள் பேரணி காண்பிக்கப்படுகிறது. துருக்கியின் குர்திஷ் இனத் தலைவரான ஓக்லேன் தலைமையிலான இடது சாரி உழைக்கும் மக்கள் கட்சியின் பேரணி வருகிறது. ஆய்டென் அக்கட்சியின் உறுப்பினர். பேரணியில் நடக்கும் சலசலப்புகளில் அதிகாரி ஒருவரின் துப்பாக்கி தவறி விழ அதை பற்றிகொண்டு அவள் ஓடுகிறாள். அப்போது அவளது செல்பேசியைத் தவற விட்டுகிறாள். தான் எடுத்து வந்த துப்பாக்கியை ஓர் அடுக்குமாடி கட்டிடத்தின் புகைக்கூண்டில் போட்டு விடுகிறாள். இதனிடையே ஆய்டேன் தங்கியிருக்கும் இடத்தை போலீசார் சோதனையிட்டு அவளது அறைத்தோழிகளை கைது செய்கிறார்கள். இனி துருக்கியில் ஆய்டெனால் தங்கியிருக்க முடியாத சூழ்நிலை. ஆகையால் “குல் கொர்க்கமாஸ்” என்ற போலியான பெயர் கொண்ட பாஸ்போர்ட் மூலம் ஜெர்மன் நாட்டிற்கு வருகிறாள். இடதுசாரி குர்து இன முஸ்லிம் இளைஞர்கள் இருவர் அவளை அழைத்துப் போகிறார்கள். நாளைக்கு தருவதாக கூறி அவர்களிடம் செலவுக்கு 100 யூரோ கேட்கிறாள். தனது செல்பேசி தொலைந்ததால் தனது தாய் எஸ்டெரின் தொடர்பை அவள் இழந்துவிடுகிறாள். ஃப்ரிமென் நகரத்தில் உள்ள செருப்புக் கடைகளிலெல்லாம் தனது தாயைப்பற்றி விசாரிக்கிறாள். ஆனால் சாதகமான பதில்களெதுவும் அவளுக்குக் கிடைக்கவில்லை. இதனிடையே வாங்கிய பணத்திற்காக தனது ஹோட்டலில் வைட்டராக பணிபுரிமாறு கூறுகிறான் அந்த இடதுசாரி நண்பன். அவள் மறுக்கவே அங்கிருந்து விரட்டப்படுகிறாள் ஆய்டென்.
தெருக்களிலும் சாலையோரங்களிலும், ஏன் ஒரு முறை நிஜாத் பயிற்றுவித்துக் கொண்டிருக்கும் அரங்கத்திலும் கூட அவள் படுத்துறங்குகிறாள். ஒரு நாள் வீதியில் லாட்ஸ்’ஸை சந்திக்கிறாள். அவளிடம் தனக்கு உதவும்படி கோருகிறாள். இப்படியாக அவர்கள் இருவருக்கிடையே நட்பு அரும்புகிறது. இருவரின் நட்பு லெஸ்பியன் உறவாக மாறுகிறது. லாட்ஸ்’ஸின் தாய்க்கு ஆய்டெனின் வருகை ஆரம்பத்திலிருந்தே பிடிக்க வில்லை. ஒரு நாள் இருவருக்கும் இடையேயான உரையாடல் வாக்குவாதத்தில் முடிகிறது. ஆய்டென் வெளியேறுகிறாள். வீட்டிலிருந்து கீழிறங்கி உட்கார்ந்து அழுகிறாள். அப்போது லாட்ஸ் வருகிறாள். ஆய்டென் அருகே அமர்கிறாள். “எனது தாயை கண்டுபிடிக்க உதவுவாயா,” என்று கதறுகிறாள் அவள். இருவரும் காரில் ஏறி செல்கிறார்கள். தேடுதல் தொடர்கிறது. திரைப்படத்தின் இந்த கட்டத்தில் தான் இயக்குநர் தனது திரைக்கதை உத்தியை பிரதானமான ஒன்றாக அமைக்கிறார். ஜெர்மானியப் பெண்ணான லாட்டி’யின் அகால மரணப்பகுதி என்பது எஸ்டெரின் மரணத்திற்கு முன் நடக்கிறது. நிஜாத் பயிற்றுவிக்கும் அரங்கில் ஆய்டென் உறங்குவதும், தனது தோழி லாட்டியுடன் சேர்ந்து எஸ்தெரைத் தேடும் போது நிஜாத்தும் எஸ்டெரும் பேருந்தில் ஆய்டெனைக் கடந்து பயணித்து செல்வதுமாக திரைக்கதையை அமைத்திருக்கிறார். திரைக்கதை சொல்வதில் இது தான் நான்- லீனியர் பாணி. நேர்கோடற்று திரைக்கதை நகர்கிறது.
எஸ்தெரைத் தேடுதல் படலத்தின் இடையே, இரவுவேளையில் போலீசாரால் அவர்களது கார் நிறுத்தப்படுகிறது. சோதனையில் ஆவணங்களை சரிபார்த்துக் கொண்டிருக்கும்போது ஆய்டென் தப்பித்து ஓட முயற்சித்து பிடிபடுகிறாள். அப்போது ‘அடைக்கலம் , அடைக்கலம்,’ என்று கத்துகிறாள். அவளைப் பிடித்து விசாரணை மேற்கொள்கிறார்கள். ஆய்டெனின் அடைக்கலம் கோரும் தாக்கல் கீழ்க்கண்ட காரணங்களால் நிராகரிக்கப்படுவதாக கூறப்படுகிறது: எவரொருவர் மதம், இனம், தேசியம், சமூக, அரசியல் ஆகியவை தொடர்பாக தங்களது சுதந்திரத்திற்கும், ஆன்மாவுக்கும் எதிரான சூழ்நிலையோ அல்லது ஒடுக்குமுறையோ அல்லது அவர்களின் உயிருக்கோ அல்லது உடலுக்கோ பாதகம் ஏற்படும்பட்சத்தில்தான் அடைக்கலம் தரப்படும்.
ஆய்டென் துருக்கிக்கு மீண்டும் அனுப்பப்படுகிறாள். துருக்கி சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஆய்டெனை காப்பாற்ற லாட்டியும் துருக்கி புறப்படுகிறாள். அவளது தாய் அங்கு செல்ல எதிர்ப்பு தெரிவிக்கிறாள். அதைமீறி அவள் புறப்படுகிறாள். திரைப்படத்தின் அடுத்த நகர்வு துருக்கியிலிருந்து தொடர்கிறது. அங்கு ஆய்டெனை சந்திக்க மறுப்பு தெரிவிக்கப்படுகிறது. ஆயுதம் தாங்கிய பயங்கரவாதக் குழுவுடன் ஆய்டென் தொடர்பு வைத்திருந்ததாக அவள் மீது குற்றஞ்சாட்டப்பட்டிருக்கிறது............
...................
................
மந்திரச்சிமிழ் இதழ்-2-ல்

Sunday 4 April, 2010

மந்திரச்சிமிழ் (காலாண்டிதழ்) இதழ்:2 & 3




அன்பார்ந்த வாசகர்களுக்கு முதலில் எனது மன்னிப்பைக் கோரிக்கொள்கிறேன். இதழ் வெகுவாக காலதாமதமாகிவிட்டது. கடந்த இதழில் குறிப்பிட்டது போல் ஏற்பட்ட வறட்சி சூழ்நிலை மற்றும் போர்ஹேஸ் சிறப்பிதழ் தயாரிப்பதில் எற்பட்ட கால தாமதம் காரணமாக இந்நிலை ஏற்பட்டு விட்டது. முதல் இதழுக்கு வாசகர்கள் தந்த ஓரளவு ஆதரவையும் பெருமிதமாகக் கொண்டு இதழை முனைப்பாக தயாரிக்கும் முயற்சியல் ஈடுபட்டேன். எனினும் சில நல்லெண்ணம் கொண்ட நண்பர்கள் மன ரீதியாக எதிர்மறை உற்சாகத்தை அளித்து பேருதவி புரிந்தனர். இன்றைய சூழலில் ஒரு சிற்றிதழ் நடத்துவது என்பது எத்தகைய சங்கடங்களை ஏற்படுத்தும் என்று அறியாதவன் நான் அல்ல. சென்ற இதழுக்கு தன்முனைப்புடன் சில விளம்பர உதவிகளை தந்த நண்பர்களும் இதழின் போக்கைக் கண்டு அன்புடன் வாபஸ் பெற்றுகொண்டனர். இருப்பினும் அதுவே நமது முதல் வெற்றி. கார்ப்ரேட்களைக் காட்டிலும் அதன் அடிவருடிகள் மிக சிரத்தையுடன் தங்கள் பணிகளை மேற்கொள்கிறார்கள்.
இவைகளைக் கூட தாங்கிக் கொள்ளலாம். பன்றிக்காய்ச்சல்தான் பெரும் தொல்லையாக இருக்கிறது. அது உயிரை மெய்யாகவே பாதிக்கிறது. தமிழில் சிறுபத்திரிக்கைக்கான வெற்றிடத்தை உணர்ந்துதான் இதழை நடத்த முனைந்து செயலாற்றி வருகிறோம். வாசகர்கள் தங்களது கருத்துகளை தெரிவிக்கும்படி சென்ற இதழிலிலேயே குறிப்பிட்டிருந்தேன். அதேபோல் இதழின் அரசியலுக்கேற்ப படைப்பாக்கங்களை கோரியிருந்தேன். எந்தவிதப் பயனும் இல்லை. சுற்றுச்சூழல் குறித்து தீவிரமாக பேசப்பட்டு வரும் இந்நாட்களில் நாம் ஏன் காகிதத்தை வீணடிக்க வேண்டும் என்ற எண்ணமும் கூட ஏற்பட்டது. இருப்பினும் சில நிறுவனங்களின் புத்தக வெளியீட்டிற்கு, பெரும் அரசியல் தனவான்களும், திரைப்பட மேதமைகளும் திரண்டு வந்து மேடையேறி ஆதரவளித்ததைக் கண்டு நாங்களும் உற்சாகம் அடைந்து மனதை மாற்றிகொண்டு இதழை நடத்த ஆர்வத்துடனும், குதூகலத்துடனும் இறங்கினோம். பல லட்சக்கணக்கான ரூபாய்கள் செலவளித்து காகிதங்களை வீணடிப்பதைக் காட்டிலும் சொற்பமாக சில ஆயிரங்கள் மட்டும் செலவழிப்பதால் எந்த தீங்கும் நேர்ந்து விடாது. இவ்விதழ் இரட்டை இதழாக மலர்ந்துள்ளது. சென்ற இதழின் தொடர்ச்சியாக இரண்டு ஃபிரஞ்ச் மொழி சிறுகதைகளின் மொழியாக்கங்களும், புதிய பகுதியாக குறும் படப்பகுதியும் இணைக்கப்பட்டுள்ளது.இனி அடுத்த இதழில் புத்தக விமர்சனப்பகுதியும் புதிதாக சேர்க்க எண்ணியுள்ளோம். புத்தகங்கள் வரவேற்கப் படுகின்றன.
தமிழ் இலக்கிய சூழலில் போர்ஹேஸ் வெகுவாக பேசப்பட்டு விட்டார். இனி என்ன உள்ளது என்று வாசிப்போர் கேட்கக்கூடும். போர்ஹேஸ் குறித்து
முழுமையாக இதுவரை தமிழில் பேசப்பட வில்லை என்பதே எனது வாதம். அவரைப் பற்றி வெளிவந்துள்ள விஷயங்கள் அனைத்தும் வெறும் ஆரம்ப அரிச்சுவடிகளே. அவரைப்பற்றிய விரிவான வாசிப்பின் தொடக்கமே எங்களது பணி.
அடுத்த இதழ் வரும் போது தமிழ் இலக்கியம் சுபிக்ஷம் பெற்றுவிடும், நமது தானைத் தலைவர் நடத்தும் செம்மொழி மாநாட்டினால் அப்பயன் கிட்டி விடும். இனி 1 ரூபாய் அரிசி போலவும், இலவச வண்ணத் தொலைக்காட்சி போலவும் தமிழும் மலிவு பெறும்...

மந்திரச்சிமிழ் (காலாண்டிதழ்)

க. செண்பகநாதன்,
24/17. சி.பி.டபிள்யூ.டி குடியிருப்பு.
கே. கே. நகர்.
சென்னை: 600078.

செல் : 9894931312