Thursday, 6 January 2011


அன்பார்ந்த வாசகர்களுக்கு
மந்திரச்சிமிழ் முந்தைய இதழுக்கும் இப்போதைய ஐந்தாவது இதழ் வெளியாகும் இடைவெளிக்குள் பல நிகழ்வுகள் நடந்தேறியுள்ளேன். பாபர் மசூதி குறித்த கட்ட பஞ்சாயத்து முதல் காஷ்மீர் ஆக்கிரமிப்பு பிரச்சனை வரை இந்திய உளவியலின் கோர முகமும், தமிழ் இலக்கியச் சூழலையும் ஒன்றாக கருத வேண்டியுள்ளது. எல்லாம் ஆளுமைகளால் நேரும் விபரிதம். தமிழில் இலக்கியம் என்ற பெயரில் வெளி வந்து கொண்டிருக்கும் வரண்ட நதியின் தீராத வேட்கையும், உயிரற்ற பிரதிகளையுடைய ஆளுமைகளும் அதனதன் போக்கில் நெடிய பாதக விளைவிகளை ஏற்படுத்தி கொண்டிருக்கின்றன.
சென்னை புத்தக கண்காட்சி நடைபெறும் காலக்கட்டத்தில் நாம் உள்ளோம். அதை முன்னிட்டு முக்கிய இலக்கிய கர்த்தாக் களின் பதிப்பகம் பல நூறு புத்தகங்கள் அச்சிடும் என்பதால் பள்ளி, கல்லூரி மாணவ மாணவிகள் தங்களுக்கு தேவையான தாள்களை முன்க்கூட்டிய வாங்கி சேமித்து வைக்கவும், அதே போல் மலம் துடைப்போர் முன் கூட்டிய காகிதங்களை வாங்கி வைத்து கொள்ளும் படி எச்சரிக்கைப் படுகிறார்கள். அப்படியில்லையென்றால் சற்று பொறுத்திருத்து புத்தக வெளியானதும் உபயோகத்திற்கு கொள்ளுமாறு அறிவுறுத்தப் படுகிறார்கள். கழுதைகள் மிகவும் அருகி வரும் காலக்கட்டத்தில் அவசியம் உங்களுக்கு வெற்று தாள்களுக்கு பதிலாக அச்சிட்ட தாள்களே கிடைக்கப்பெறும்.
இலவசங்களே தீர்ந்து போகும் அளவுக்கு கலைஞரின் இலவசத்திட்டங்களுக்கு அடுத்தப்படியாக கலைஞர் வீட்டு கட்டும் திட்டம் நிறைவேறி வருகிறது. வரும் தேர்தலில் இலவசங்கள் குறித்து அறிவிப்பு விடுவதற்கே அவருக்கு பஞ்சம் நேரலாம். அதற்காக பண்ணாட்டு நிறுவனங்களின் புரிந்துணர்வு ஒப்பந்நத் தோடு இலவசங்களை ஆராய்வதற்கே ஒரு ஆய்வு மையம் அமைக்கும் நெருக்கடி கூட கலைஞருக்கு வரலாம். ஆகையால் எங்களின் சிற்றறிவுக்கு எட்டிய யோசனையாக அடுத்த தேர்தலில் தி.மு.க. ஆட்சிக்கு வந்தால் கலைஞர் குடும்பத்தார் எடுக்கும் படங்களுக்கு இலவச டிக்கெட் தரவேண்டும் என்ற வேண்டு கோளை முன்வைக்கிறோம். ஏன் 2ஜி ஸபெட்ரத்தை கூட இலவசமாகத் தரலாம்.
வெகுஜன பத்திரிகையில் வெளியான தங்களது படைப்புகள் சிறுப்பத்திரிக்கையில் வெளி வருவதற்கான ஆனைத்து தகுதிகளும் கொண்டவைகள் என்பதாக சிலர் தெரிவித்து வரும் வேளையில் இது குறித்து பேச வேண்டிய அவசியம் உள்ளது. சிறு பத்திரிக்கை என்ன என்பது இவர்கள் முதலில் அறிந்து கொள்ளட்டும். சிறு பத்திரிக்கையில் முதல் கடமையே அறம் சார்ந்த விஷயம். அத்தகைய பத்திரிகையும் அறமுள்ளதாக இருக்க வேண்டும். எழுதுபவரும் அந்த அறத்துடன் இருக்க வேண்டும். அயல் இலக்கிய படைப்புகளை அங்கும் இங்கும் மாற்றி தன் படைப்பாக வெளியிடுவது எத்தகைய சிறு பத்திரிகை தரம் என்பது புலப்பட்ட வில்லை. வெகு ஜன ரசனை என்பதோடு தன்னை இணைத்து கொண்டும், அதில் சுக்கில சுகம் அடைந்து விட்ட இந்த பராகிரம பாக்கியசாலிகளுக்கு இம்மாதிரியாக சிறுப்பத்திரிகை மீது ரோமான்டிசம் அவசியமில்லை.
தமிழில் புதிய போக்கு சமீப காலமாக மேலோன்றி வருகிறது. தினக்கழிவு போல் எழுதித் தள்ளுகிறார்கள். ஒவ்வொரு எழுத்தாளரும் தலையனை அளவில் புத்தகங்களை எழுதி வருகிறார்கள். அந்த நூல்களை எவரொருவராவது முழுவதுமாக படித்திருப்பார்களென்றால் அது சாத்தியமில்லை. ஏனென்றால் அளவு பொருட்டல்ல. அதில் படிக்கும் அளவுக்கு ஏதும் இல்லை என்பதே நிதர்சனம். வாசிப்பவர்களை அச்சத்தில் ஆழ்த்தி தன்னை ஒரு மேதைமைமிக்கவராக காட்டிக்கொள்ளும் விதம் மிக அற்பமானது.
சமீபத்தில் முன்னாள் முதல்வர் பெயர் கொண்ட அரங்கத்தில் நடைப்பெற்ற ஒப்பற்ற தமிழ் இலக்கிய கர்த்தா சாரு. நிவேதா’வின் புத்தக வெளியீட்டில் கலையுலக மாமேதை கனிமொழி அழைக்கப்பட்டிருக்கிறார். உலகமே அவரது அரும்பெரும்(அருவருப்பான) சாதனையான 2ஜி ஸபெகட்ரம் குறித்து உமிழ்ந்துகொண்டிருக்கையில் அவருக்கு தார்மீக ஆதரவை தரும் வகையிலும், இலக்கிய கர்த்தா என்ற அங்கீகாரத்தை தூக்கிப் பிடிப்பதற்கும், முன் பெற்ற பிச்சைகளுக்கு ப்ரயசத்தத்திற்மாக கூட இதை கொள்ளலாம். அரசியலில் தன்னாலான மேதகு காரியங்கள் போதாதென்று அந்த அம்மையாரும் புறப்பட்டு வந்துவிட்டார்.
ஆட்சிமாறினால் அடுத்து வரும் ஆட்சியாளர்களை விமர்சித்து கவிதை புனைய இலக்கிய கூலிகளை தேற்ற தனது அடிவருடிகளை தேடி வந்து விட்டார் போலும். இல்லை அனைத்து துறை போலவே இத்துறையிலும் தாங்கள் குடும்பத்தின் ஏகபோகம் என்பதாக எண்ணி கொண்டார் போல். அதுவும் சாத்தியம் தான் தமிழ் நாடு அடிவருடிகளின் சொர்க்க பூமி. உயிர்மை மீது கொண்டிருக்கும் அனுதாபத்தை சாதகமாக்கி கொண்டு மனுஷியபுத்திரன் ஆடும் ஆட்டத்தை அடக்கிக் கொள்வது அவருக்கு நல்லது.
இலக்கியம் என்பது மொழியை சிலேகித்து எழுத வேண்டிய ஒன்று, அதில் எத்தகைய விரசமும் இருக்க வாய்ப்பில்லை. எஸ். ராமகிருஷ்ணன் பற்றி பேசும் சாரு. அவரது மொழியின் இலகுத்தன்மை குறித்து அறிந்துள்ளாரா என்பது சந்தேகமாக உள்ளது. எஸ். ராமகிருஷ்ணனின் பரந்தபட்ட வாசிப்பாளர். அவரது முற்பகுதி எழுத்துகள் சிறப்பானவை. தமிழில் காலம் கடந்து முன்னணி இலக்கியவாதியாக திகழ வேண்டிய எஸ். ராமகிருஷ்ணன் அரசியல்வாதி போன்ற செயல்களில் ஈடுபடுவது உகந்ததாக அமையாது. அதற்கு பதிலாக தனது படைப்புகளின் மீது அக்கரை கொண்டு இதுவரை அவர் வீண்டித்த காலங்களுக்கு பிரயாசித்தம் தேடிகொள்ள வேண்டும்.
கலைஞர் ஒரு இலக்கியவாதி அல்ல என்று தனது ஞானத்தின் மூலம் கண்டறிந்த ஜெயமோகனின் எழுத்துகளும் இலக்கிய தரமற்றது என்று யாவரும் அறிந்ததே. எழுத்து என்பது ஒரு வித பித்து நிலையிலிருந்து வெளியாகும் அம்சம். அத்தகைய நிலையில் ஜெயமோகன் ஒரு சைக்கோ என்று கூறி, அவருக்கு ஒரு பித்தநிலை வழங்கி ஆசித்தந்த கனிமொழியை வைத்து புத்தக வெளியீட்டை நடத்திய சாருக்கு ஜெயமோகனைப் பற்றி அத்தகைய ஆவேசம் அவசியமில்லை. ஒருவேளை ஜெயமோகன் சினிமா துறையில் பிரவேசிப்பதால் சாருவுக்கு ஆதங்கம் இருக்கலாம். இலக்கியம் என்று எடுத்துகொண்டால் இருவருமே பூஜியம். தமிழ் வாசகர்களுக்கு எழுதுவது குறித்து அடிக்கடி வருத்தம் கொள்ளும் சாரு, அத்தகைய உவகையற்ற பணியை விடுத்து சந்தோஷம் தரும் ஏனைய செயல்களில் அவர் ஈடுப்படலாம். குறிப்பாக புகழ்மிக்க உலகத்தரம் வாய்ந்த அரசியல் விமர்சகரிடம் தன் டவுசரை கிழற்றி காட்டி புணரச்செய்ய கட்டாயப்படுத்தியது போல்.
மந்திரச்சிமிழ் இதழ் இரண்டாம் ஆண்டை எடுத்து வைக்கும் வேளையில் அரசியலை முற்றிலும் தவிர்க்க எண்ணியுள்ளோம். இனி இதழில் அரசியல் தொடர்பான விஷயங்கள் அறவே இருக்காது. ஆகையால் இதழில் எழுதும் எழுத்தாளர்கள் இதனை கவனத்தில் கொள்ளுமாறு வேண்டுகிறோம். இதழ் முற்றிலும் கலை இதழாகவே இனி பிரவேசிக்கவுள்ளது. இதழில் அயல்மொழி படைப்புகள் அதிகம் வெளி வருவது குறித்து பலர் வருத்தப்படுகிறார்கள். பத்திரிகை தமிழில் தான் வருகிறது என்பதையும், அயல் மொழிகளில் வருவதில்லை என்பதையும் தாழ்மையுடன் கூறிக்கொள்ள கடமைப்பட்டுள்ளோம்.
- பதிப்பாசிரியர்

Wednesday, 21 July 2010

மாண்புமிகு முதல் அமைச்சர் முத்தமிழ் அறிஞர் ஐயன் கலைஞர் அவர்களுக்கு ஒரு வேண்டுகோள் விண்ணப்பம்


மாண்புமிகு முதல் அமைச்சர் முத்தமிழ் அறிஞர் ஐயன் கலைஞர் அவர்களுக்கு ஒரு வேண்டுகோள் விண்ணப்பம்


அனுப்புநர்: கலைஞர் தாசன்.
தமிழ் இல்லம்
தமிழ் தெரு,
தமிழுர்.
தமிழ்நாடு. அஇஈஉஊஏ
பெறுநர்: மாண்புமிகு முதல்வர் அவர்கள்
தமிழ் நெஞ்சம்,
தமிழ் கோட்டை
தமிழ்நாடு.அஇஈஉஊஎ.

பொருள்: ஐயா! என்னை தமிழர் என்று அங்கிகரிப்பீர்களாக

ஐயா!
சூன் மாதம் நடைப்பெற்ற செம்மொழி மாநாட்டுக்கு வருகைத் தராதவர்கள் தமிழரல்ல என்று குறிப்பிட்டிருந்தீர்கள். அதை கண்டு நான் அதிர்ந்து போனேன். நான் மாநாட்டிற்காக புறப்பட்டு சென்னை புறநகர் பேருந்து நிலையம் வந்த வேளையில் இயற்கை கூட தமிழுக்கு எதிரியாக ஆகி போனது. எனக்கு கடுமையான வயிற்று போக்கு ஏற்பட்டதால் பேருந்து நிலைய கழிப்பறையில் முன்று நான்கு மணி நேரம் கழிக்க நேரிட்டது. பிறகு தவழ்ந்தவாறே இரவு முழுவதும் பயணித்து வீடு வந்து சேர்தேன். வரத் தவறிய அல்லது வர மறுத்த மற்றவர்களை போல் என்னையும் எண்ணி விடாதீர்கள். எனது வாழ்நாள் முழுவதும் தமிழுக்காகவே வாழ்ந்து வருகிறேன். எனக்கு வேறு எந்த மொழியும் தெரியாது. தமிழ்நாட்டை விட்டு வேறெங்கும் வாழவும் வக்கற்றவன். ஆகையால் மாநாட்டிற்கு வர இயலாததற்கு உடன் நலம் சரியில்லை என்பதைத் தவிற வேறு காரணம் ஏதுமில்லை. ஆகையால் ஐயா, என்னை மன்னித்து, மாநாட்டுக்கு வந்த மற்ற தமிழரைப் போல் என்னையும் ஒரு தமிழர் என்று அங்கிகரிக்க வேண்டும் என்று தாழ்மையுடன் வேண்டிக் கொள்கிறேன்.
இப்படிக்கு
உண்மைத் தமிழன்
கலைஞர் தாசன்

(ஐயா! இந்த வேண்டுதல் கடித்ததுடன் தமிழுக்கு எதிரான சக்திகளைப் பற்றியும், உங்களது அரும் பெருமை பற்றியும் ஒரு நீண்ட கடிதத்தை இணைத்துள்ளேன்)
ஐயா! உங்களது ஆற்றலை அறியாத பேதைகளுக்கு நான் உரைப்பது என்னவென்றால், அவர்கள் பேதைகள் என்பதை விட வேறு என்ன கூற முடியும். தமிழரல்லாத அந்த தமிழ் விரோதிகள் இருந்து என்ன பயன். இந்த தமிழர் அல்லாத பீடைகள் உலகமெங்கும் விரவி கிடக்கிறார்கள். உங்களை வாழ்த்தாத தமிழர் அல்லாத தமிழ் விரோத நாட்டு தலைவர்களுக்கு எனது கண்டனத்தை தெரிவித்து கொள்கிறேன். குறிப்பாக தமிழர் என்ற சந்தேகத்திற்குரிய அமெரிக்க அதிபர் ஒபாமா, சீன தலைவர் ஊ சின்டோ, பிரஞ்சு, இங்கிலாந்து மற்றும் ஏனைய அனைத்து தமிழர் என்று சந்தேகத்திற்குரிய நாட்டு தலைவர்களுக்கும் எனது கண்டனத்தை தெரிவித்து கொள்கிறேன்.


கி.மு 50000- வது நூற்றாண்டு முன் வாழ்ந்த தமிழ் புலவனின் வழித் தோன்றலான இக்காலக் கவிஞர் உரைத்தது போல் நீர் தான் தமிழ். எந்நாளும் நீ தான் தமிழ் மாமன்னன்.
“தமிழா! தமிழா! நாளை உன் நாளே
தமிழா! தமிழா! நாளும் உன் நாளே!”
என்று பாடிய மகா கவிஞர் தமிழின் உச்சம். உங்களின் மிச்சம். இதைப் போல் உங்களை புகழாத சொச்சம் வெறும் எச்சம். மாநாட்டுக்கு வந்திருந்த உண்மை தமிழர்கள் தமிழே ஆன உங்களை புகழ் பாடினர். அதை கண்டு இங்கு வாழும் ஈனர்களுக்கோ ஆத்திரம். “அனைத்து சாலைகளும் கோவையை நோக்கியே,” என்ற நிலையில் மாநாட்டுக்கு வராமல் இருந்தவர்களை மதுரையில் இன்னும் உள்ள ஆதி கழுமரத்தில் ஏற்ற வேண்டும்.
தமிழ்நாட்டில் உள்ளவர்கள் தான் இப்படி என்றால், இலங்கையில் வாழ்பவர்களை என்னவென்று கூறுவது. தமிழ் நெஞ்சம் சிவதம்பி தவிற, முள்வேலியில் வசந்த வாழ்வு கொண்டிருக்கும் சந்தேகத்திற்குரிய தமிழர்கள் வரவில்லை. உங்களது மாநாட்டு வர வக்கற்று இறுதிகட்ட போரில் மடிந்து போன தமிழர் அல்லத மற்றும் தமிழரா? என்று சந்தேகத்திற்குரியவர்களையும் நான் கண்டிக்கிறேன். இதை நான் கூறுவதற்கு காரணம், அயராது தமிழுக்காகவே உழைத்து கொண்டிருக்கும் உங்களுக்கு துரோகிகளையும், தமிழ் எதிரிகளையும் சந்தேகத்திற்கு இடமின்றி இனங்காட்ட வேண்டிய கடமை எனக்கு உண்டு.
ஆகையால் தலைவரே! மாநாட்டுக்கு வந்திருந்த 10 லட்சம்(சுமார்) பேர்களும் சந்தேகத்திற்கு இடமில்லாமல் தமிழரே என்பது எனது திண்ணம். குறிப்பாக மாநாட்டுக்கு வந்திருந்த தமிழ் இந்திய குடியரசுத் தலைவர், மற்றும் தமிழ் இந்திய நிதியமைச்சர் அவர்களை பாராட்டுகிறேன்(இவர்கள் பெயர்கள் குறித்து கி.மு.45002-ம் நூற்றாண்டில் வாழ்ந்த செக்கோசுலோவிக்கியா தமிழர் என்று சந்தேகமற்ற அறிஞரும், 45001-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த தமிழர் என்று சந்தேகமற்ற உகாண்ட தமிழ் அறிஞரும் அவர்களது பெயர்கள் குறிந்து சந்தேகத்தினால் அந்த சர்ச்சை வேண்டாம் என்று இருவரின் பெயர்களையும் நான் குறிப்பிட வில்லை) .
உலக தமிழர்களின் மக்கள் தொகை
(தமிழர் என்று சந்தேகத்திற்கு உட்படாமல் ): 6,856,600,000 (சுமார்)
தமிழ்நாட்டின் உள்ள தமிழர்களின்
மக்கள் தொகை
(தமிழர்கள் என்று சந்தேகத்திற்கு உட்பட்டு) 66,396,000(சுமார்)
மாநாட்டில் பங்கு கொண்ட
உண்மை தமிழர்கள் 1,000,000(சுமார்)+1
கடுமையான உடல் நிலை பாதிப்பினால்
மாநாட்டிற்கு வரத் தவரிய தமிழர்
(உங்கள் அங்கீகாரத்திற்காக காத்திருப்பு) 1

ஆக மொத்தம் உலகில் உள்ள சந்தேகத்திற்கு
இடமின்றி தமிழர்கள் : 1,000,001(சந்தேகத்திற்கு
இடமின்றி நிதர்சனம்)

தலைவா நான் மாநாட்டுக்கு வர இயலவில்லை என்றாலும் உம்மை பற்றி நான் புகழுறை அளிக்காவிட்டால் எனது பிறவிக் கடன் தீராது.
தலைவா! இந்த கவிமழை:
இதோ புடிச்சிக்கோ:
தமிழ் மன்னவா
நீ சாணக்கியனான தமிழன்
தமிழின் கனி
மொழியில் செம்மொழி

தலைவா நீ
தேசத்தை பாதுகாத்த
தேச பாதுகாப்பு சட்டம்.

தலைவா நீ
சீனர்களுக்கு மாவோஸ்ட்
சிகரத்தில் எவரஸ்ட்
போயஸ் கார்டனுக்கு நீ டேரர்ரிஸ்ட்,

தலைவா நீ
மகா கவி
உனக்கு அளிக்கப்படாத
நோபல் பரிசு,
இனி நோபல் பரிசு
எவருக்கும் அளிக்காது
நோ பீஸ்(அமைதி).

இலங்கையில் புலியாம்
இங்கே பகையாளியாம்
நம் பெண் சிங்கம்
சோனியா இருக்கையில்
ஏன் பீதியாம்?

உலகில் ராஜாவாம் உயரியம்
2-ஜி ஸ்பெட்ரம்
இனி தமிழன் தான்
முதல் தரம்.

தலைவா நீ, தமிழ் அங்காடி
உனக்கு போட்டியா
ரிலையன்ஸ் பல்பொருள் அங்காடி.

தலைவா! இன்னும் நிறைய எழுத என் நெஞ்சம் கொள்ள கொள்கிறது. எனினும் கவிஞர் வாலி அவர்கள் இதை விட அழகாக இன்னும் புகழ் பாடுவார் என்பதால் இந்த பொடியன் விழகிக் கொள்கிறேன்.
உலகில் உள்ள 600 கோடிக்கும் மேற்பட்ட தமிழர்களின்(சந்தேகத்திற்கு இடமின்றி, கி.மு. 70000 ஆண்டுகளுக்கு முன் பிறந்த எகிப்திய அரசரும் தமிழர் என்று சந்தேகத்திற்கு இடமில்லாத ஆராய்ச்சி குறிப்பிடுவதால்) ஒரே தலைவன் நீர் தான். உமது பெருமை குறித்து நமக்கு புதிதாக கிடைத்த செப்பு பட்டையத்தை ஆய்தல் வேண்டும். இந்த மாநாட்டிற்கு எதிராக தமிழரல்லாதவர்கள் எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள். அதற்காக அவர்கள் கூறும் காரணங்கள் இலங்கையில் தமிழர் பல்லாயிரம் பேர் கொல்லப்பட்டார்களாம். நான் கேட்கிறேன்.
இலங்கையில் கொல்லப்பட்டவர்கள் தமிழர் என்பதற்கு என்ன ஆதாரம் உள்ளது. என்றாவது இந்தி எதிர்ப்பு போராட்டத்திற்காக மணமேடையில் இருந்து புறப்பட்டு வந்தார்களா?. ரயில் தண்டவாளத்தில் தலை வைத்து படுத்திருக்கிறார்களா? அல்லது, பாளையம் கோட்டை சிறையில் பாம்புகள் மத்தியில் சிறைப்பட்டிருக்கிறார்கள், அல்லது உங்களுக்கு மாமானா, மச்சானா அவர்கள், மானங்கெட்டவர்கள். இப்படி எதும் செய்யாதவர்களை எப்படி தமிழர்கள் என்று ஏற்க வேண்டும். குறைந்த பட்சம் தி.மு.க. வுக்கு ஓட்டாவது அளித்திருக்கிறார்களா? அல்லது கடந்த ஆட்சியல் ஒரு நள்ளிரவில் நீங்கள் கைது செய்யப்பட்ட போது அதிர்ச்சியில் இறந்து போன பல்லாயிரக்கணக்கானவர்களில் ஒரு சிலராவது இவர்களா? ஆகையால் இவர்கள் தமிழர் ரத்தம் இல்லை என்பது புலனாகிறது. இப்படியான நிலையில் உங்களது புகழை கண்டே இவர்கள் இவ்வாறு கூக்குரலிடுகிறார்கள்.
அதே போல் செம்மொழியாக நம் தமிழ் மொழி அங்கீகாரம் பெற்றதற்கு ஏதோ தமிழ் மொழியின் சிறப்பு என்று கூறுகிறார்கள். இன்னும் சிலர் செம்மொழி குறித்து வேறு பல அறிஞர்கள் ஒரு நூற்றாண்டு முன்னரே கோரிக்கை விடுத்ததாக கூறுகிறார்கள். அவர்களை யார் தமிழ் செம்மொழி ஆவதற்கு முன்னரே கோரிக்கை விடுக்கச் சொன்னது. ஐயா, நீங்கள் தான் தமிழ். அது எப்படி நீங்கள் பிறப்பதற்கு முன்னரே தமிழ் சிறப்பனாது என்று கருத்து தெரிவிக்க முடியும். ஆகையால் அவர்களும் சந்தேகத்திற்கு உரிய தமிழர்களே!
அதே போல் மாநாட்டுக்கு வந்த தமிழர்கள் மிகுதியாக மது அருந்தியதாக கூறுகிறார்கள். தமிழகத்தில் விற்கப்பபடும் மதுவை தமிழர் அருந்தாமல் வேறு யாரை அருந்த அனுமதிக்க முடியும். அண்டை மாநிலங்கள் நமக்கு நீர் தராமல் தடுக்கையில் நாம் ஏன் மற்ற மாநிலத்தார்களுக்கு மது கொடுக்க வேண்டும். ஆகையால் தமிழரே அருந்த வேண்டும். அதே போல் மாநாட்டுக்கு வந்தவர்கள் உண்மையான தமிழ் குடிகள், திராவிட குடிகள் என்பதை வலிமையுடன் கூறி கொள்ள கடமை பெற்றுள்ளேன்.
அதே போல் தாங்கள் எழுதிய மாநாட்டு பாடலை சிலர் குறை கூறுகிறார்கள். நீங்கள் இப்படலை எழுதியதற்காக, கவிப்பேரசர் வைரமுத்துவைப் போல் சிறந்த பாடலாசிரியருக்கான விருதையா கோரவாப் போகிறீர்கள்? அல்லது விற்பனை உரிமையாத்தான் கோரப்போகிறீர்கள்? இலவசமா செய்தது தானே. தமிழனுக்காக வீட்டை தந்தீர்கள், உங்கள் மக்களை தந்தீர்கள், உங்கள் ஆற்றலை தந்தீர்கள், உங்கள் தமிழை தந்தீர்கள், அதே போல் தான் பாடலையும் தந்தீர்கள். தமிழ் இந்திய குடியரசுத் தலைவி பொருள் உணர்ந்து அப்படலை புகழ்ந்தாரே, அதுக் கூடவா இவர்களுக்கு புரியவில்லை.
தஞ்சையில் நடந்த கடந்த தமிழ் மாநாட்டின் போது “ தமிழ் இங்கிருக்க அங்கே ஏன் வீணாக மாநாடு,” என்று அன்று குமுறிய உலக மகா கவிஞர் அப்துல் ரகுமான். இன்று தமிழுக்காக இப்படியான மாநாட்டில் தனது பிறவிப்பயனை அடைந்து விட்டார். உலகத் தமிழர்களின் தலைவர் நீங்கள் என்கிறார் சிவத்தம்பி. நாளை ராஜ பக்ஷே அழைத்தால் கூட அந்த பட்டத்தை திருப்பி போட்டு விடுவார். இப்படியாக தமிழாக விழங்கும் ஐயா! கலைஞர் அவர்களே! உங்கள் ஆற்றலை பல்லாயிரம் பக்கங்கள் நீட்டிக் கொண்டே போகலாம். இருப்பினும் இதை மறுக்கும் ஈனர்கள் இருக்கிறார்கள் என்பது தான் மனம் நொந்து போகிறது.
தலைவரே! இப்படியாக நான் கூறுவதன் மூலம் தமிழர் அல்லாத கொசுக்கள் கடிக்கக்கூடும், தமிழர் அல்லாத ஈக்கள் மொய்க்கக்கூடம், தமிழரல்லாத ரவுடிகள் எனது வாயிலேயே குத்தக்கூடும், இருப்பினும் உங்களது கொடையின் கீழ் வாழும் சாதாரண தமிழன்(அங்கீகாரத்திற்காக காத்திருப்பு) என்பதலும், உங்களது பாதுகாப்பு இருப்பதாலும் நான் தைரியமாக இதை எழுதுகிறேன்.

Sunday, 16 May 2010

கிம் கி டுக் நேர்காணல்


இழிந்தவன் திரைப்படம் குறித்து கிம் கி டுக் அளித்த நேர்காணல்: பகுதி: 1

கேள்வி: நீங்களே ஒரு முறை கூறியிருக்கிறீர்கள் உங்களது படங்கள் “வெறுப்பு” என்ற நிலையிலிருந்து தான் தொடங்குகிறது என்று. இப்போது உங்களது புதிய படமான இழிந்தவன்-ல் எத்தகைய அணுமுறையை கையாண்டிருக்கிறீர்கள்?

கிம் கி-டுக்: “வெறுப்பு” என்ற வார்த்தையை நான் பலமுறை பயன்படுத்திருக்கிறேன் என்பது உண்மை தான். ஆனால் நீங்கள் அந்த வார்த்தையை உள்ளடத்தைத் தாண்டி நினைத்து விடுவீர்கள் என்று நான் எண்ண வில்லை. நான் கூறும் “வெறுப்பு” குறிப்பிட்ட ஒன்றை பற்றியோ, ஒரு பொருள் பற்றியோ அல்லது ஒரு தனி நபர் பற்றியோ அல்ல. நான் கூறும் “வெறுப்பு” எனது வாழ்க்கையில் கிடைத்த, வாழ்ந்து கொண்டிருக்கும் வாழ்க்கையிலிருந்து பெற்றது. அதன் முலம் நான் கண்டுணர்ந்ததை திரைப்படமாக எடுக்கிறேன். சில சமயங்களில் எனக்கு புலப்படாதவைகளை ஈடுகட்டுவதற்காக படங்களை எடுக்கிறேன். ஆகையால் “வெறுப்பு” என்று கூறுவதை காட்டிலும் “புரிந்து கொள்ளாமை” என்றே பேசலாம்.

கேள்வி: இழிந்தவன் படத்தின் மூலம் தாங்கள் இந்த உலகத்தில் எத்தகையதை கண்டறிய முயன்றுள்ளீர்கள்டீர்கள்?

கிம் கி-டுக்: எனக்குள்ளே தொனித்து கொண்டிருக்கும் கேள்வி என்னவென்றால், ஒவ்வொருவரும் பிறக்கும் போது ஒரே அந்தஸ்த்துடன் ஏற்றத் தாழ்வு ஏதும் இன்றி பிறக்கிறோம். ஆனால் வளர்ந்ததும் ஏற்றத் தாழ்வுகள் உருவாகி நிலைக்கு தகுந்தவாறு வகைப்படுத்தி தரம் பிரித்து பார்க்கிறோம். நாம் ஒருவரை உருவத்தையும் தோற்றத்தையும் கொண்டு ஏன் மதிப்பட வேண்டும்? நம்மிடம் பணம் இருக்கிறதோ இல்லையோ எதற்காக ஒருவரை பணத்தை கொண்டு ஏன் முக்கியத்துவம் தருகிறோம்? அத்தகையவர் அழகுடனோ அல்லது அவலட்சணத்தோடு இருந்தாலும் நாம் பொருட்படுவதில்லை. இத்தகைய தகுதி வரையறை நமது பிறப்புக்குப் பின் திணிக்கப்பட்டதாகும். இதன் அடிப்படையில் சமூக மற்றும் பொருளாதார ஏற்றத்தாழ்வுகளுக்கு ஏற்ப நாம் ஒவ்வொருவரும் தரம் பிரிக்கப்பட்டு வகைப்படுத்தப்பட்டிருக்கிறோம். இதனால் ஒருவரோடு மற்றொருவர் இணைந்து வாழ வகை வழியின்றி போகிறது. இதனால் நான் கேட்பதெல்லாம் இத்தகைய ஏற்றத் தாழ்வுடைய சமூக அடுக்குகள் உலகத்தோடு கலந்து வேறுபாடின்றி இருக்க வாய்ப்பில்லையா என்று தான்.

கேள்வி:
இந்த கேள்விக்கு பதிலை கண்டுப்பிடித்து விட்டீர்களா?

கிம் கி-டுக்: நான் கேட்பதெல்லாம் மனிதர்களை ஒருவர் மற்றொருவரை மதிக்க வேண்டும் என்பதே, தோற்றம் கொண்டோ அல்லது பணத்தினாலோ அல்லது வகுப்பு போதத்தினாலோ துவேஷம் செய்ய கூடாது. அது தான் எனது பதிலும் கூட. அத்தகையதைத் தான் பார்வையாளர்களிடம் முன்னிலைப்படுத்துகிறேன். எனது கேள்வியை அவர்களிடமே வைக்கிறேன். ஒவ்வொருவரும் தங்களுக்கு ஏற்றாற் போல் விடையை கண்டுப்பிடித்து விடுவார்கள்.

கேள்வி:
தற்போதைய படமான இழிந்தவன்(Bad Guy)- னில் முக்கிய கதாபாத்திரமான ஹாங்-ஜி ஒரு காமத் தரகன். விபச்சார விடுதிகளுக்கு பெண்களை கவர்ந்து செல்பவன். அவனது மொழி மௌனம். எந்த விதத்திலும் தனது உணர்வை வெளிக்காட்ட இயலாதவனாவும், தனது ஒரே மொழி வன்செயல் என்பதாகவும் உள்ளான். அவனது மௌனத்திற்கு காரணம் தான் என்ன?


மந்திரச்சிமிழ் இதழில்.......

Wednesday, 14 April 2010

ஃபெத்திக் அக்கின்


ஃபெத்திக் அக்கின்- இருவேறு தேசங்களிலிருந்து......


“திரைப்படத்தின் தொடக்கத்திலேயே கேளிக்கையை
புகுத்தும் பட்சத்தில் அது நாடகத்தன்மையை அடைகிறது
ஏனெனில் பார்வையாளர்களை அது சிரிக்க வைக்கும்.
அது ஏதோவொரு வகையில் அவர்களின் ஆன்மாவை
விழிக்கச் செய்கிறது. அவ்வாறு அவர்களின் ஆன்மாவை மீட்சிக்கொள்ள செய்வதை விட அவர்களை கத்தியால்
குத்துவதே மேல்”.
-ஃபெத்திக் அக்கின்-


காலகட்டங்கள் மாறுகின்றன. புது வகை கதைசொல்லல் சினிமாவிலும் அவசியமாகிறது. துருக்கியில் விட்டுச் சென்ற தனது சிறகுகளை கேமராக் கண்களின் வாயிலாக தேடும் ஃபெத்திக் அக்கின் 1973 ஆம் ஆண்டு ஜெர்மனியில் உள்ள ஹாம்பெர்கில் துருக்கிய இஸ்லாமிய தாய் தந்தையர்களுக்கு மகனாக பிறந்தார். ஹாம்பெர்க் கல்லூரியில் காட்சி வழி தகவல் தொடர்பியல் (Visual Comunication) பயின்று கொண்டிருக்கையில் 1995 ஆம் ஆண்டு sensin என்ற குறும்படத்தை எழுதி இயக்கினார். அந்த குறும்படம் மிகுந்த பாராட்டைப்பெற்றதோடு அல்லாமல் ஹாம்பெர்க் சர்வதேச குறும்பட விழாவிலும் பரிசுபெற்றது. அதனைத் தொடர்ந்து 1996 ஆம் ஆண்டில் கீமீமீபீ என்ற குறும்படத்தை எழுதி இயக்கினார். ஃபெய்த் அக்கிம்’மின் முதல் முழுநீள திரைப்படமான ரிஹிஸிஞீ ஹிழிஞி ஷிசிபிவிணிஸிஞீலிளிஷி 1998ல் வெளியானது. இந்தப் படத்தின் மூலம் அவருக்கு சிறந்த இளம் இயக்குநருக்கான வெண்கலப்பதக்கம் கிடைத்தது. ஜெர்மானிய மெக்ஸக்கோ நடிகையான மாணிக் ஓபர்முல்லர்’ரை 2004 ஆம் ஆண்டு மணந்துகொண்டார் ஃபெய்த் அக்கின்.
ஃபெத்திக் அக்கினுக்கு சினிமா கலைஞனாக மட்டுமின்றி துணிச்சலான அரசியல் நோக்கமும் கொண்டவர். அவருடைய சில செயல்பாடுகள் சர்ச்சைகளைக்கூட உருவாக்கின. ஜெர்மனியில் நாசிகள் மேற்கொண்ட யூத இன பேரழிப்பான ஹாலோகாஸ்ட்’டை சிறுமைப்படுத்தியதற்காகவும், அவர் அணிந்திருந்த டி-ஷேர்ட்டில் அமெரிக்காவின் முன்னாள் அதிபர் புஷ் (ஙிusலீ) பெயரில் உள்ள “s” என்ற எழுத்துக்குப் பதிலாக நாசிகளின் ஸ்வத்திக் குறியை இட்டதற்காகவும் ஜெர்மன் போலீசார் அவர்மீது விசாணையை மேற்கொண்டனர். அதுகுறித்து அவர் விளக்கம் அளிக்கையில் “நான் இவ்வாறு ஸ்வத்திக் குறியிட்டது ஆத்திரமூட்டுவதற்காக அல்ல. புஷ்’ஷின் கொள்கை ஹிட்லரின் ஆட்சியைப்போலிருப்பதை வலியுறுத்தத்தவே. புஷ்’ஷின் ஆட்சியில் ஹாலிவுட்டு கூட பென்டகனின் கைப்பாவையாக மாறியுள்ளது. கவுன்டமாலா சிறை சித்ரவதைகளை இயல்பான சம்பவங்களைப்போல் ஹாலிவுட் படங்கள் சித்தரித்தன. புஷ்’ஷின் அரசாட்சி மூன்றாம் உலக போருக்கு உலகத்தை இட்டுச் செல்லக் கூடும் என்பதை வலியுறுத்தத்தான் நான் அவ்வாறு செய்தேன்,” என்று குறிப்பட்ட அக்கின், “புஷ் ஒரு பாசிஸ்ட் என்பதாகவே நான் கருதுகிறேன்,” என்றார்.
தனது முஸ்லிம் என்ற அடையாளத்தை எந்தச் சூழ்நிலையிலும் ஃபெத்திக் அக்கின் வெளிப்படுத்த தயங்க வில்லை. கடந்த நவம்பர் 2009 ஆம் ஆண்டு சுவிட்சர்லாந்து அரசு இஸ்லாமிய கலாச்சாரத்தைப் பிரதிபலிக்கும் வகையில் மீனோரேட்ஸ்(விவீஸீணீக்ஷீமீt)'ல் உள்ள கட்டடக் கலைக்கு தடைவிதிக்க பொது வாக்கெடுப்பு நடத்தியது. அந்த வாக்கெடுப்பு அமோக ஆதரவுடன் வெற்றிப் பெற்றது. அதற்கு தனது கடுமையான அதிருப்தியை வெளியிட்ட ஃபெத்திக் அக்கின், “ இத்தகைய பொது வாக்கெடுப்பு மனிதாபிமானமும், சகிப்புத் தன்மையும் அற்றது. வேற்று கலாச்சார, மதம், இனம் கொண்ட மக்கள் மீது தொடுக்கப்பட்ட தாக்குதலாகவே நான் கருதுகிறேன். அதேவேளையில், இஸ்லாமியப் பெற்றோருக்கு மகனாக பிறந்த என்னால் மீனோரேட்ஸ்’ஸை இஸ்லாமிய மத அரசியலின் அடையாளமாக பார்க்க முடியவில்லை" என்றார். மீனோரேட்ஸ்’ஸை வழிப்பாட்டுக்குரிய கட்டடமாகவே தான் கருதுவதாகவும், சுவிட்சர்லாந்து அரசாங்கத்தின் செயல் தன்னை பாதித்திருப்பாகவும் தெரிவித்த அவர் இனிமேல் சுவிட்சர்லாந்து செல்லப் போவதில்லை என்றும், தனது சமீபத்திய படமான ஜிலீமீ ஷிஷீuறீ ரிவீtநீலீமீஸீ யை அந்நாட்டில் திரையிடப்போவதில்லை என்றும் தெரிவித்ததோடு, இஸ்லாமியர்கள் அனைவரும் சுவிஸ் வங்கியில் சேமித்திருக்கும் பணம் முழுவதையும் உடனே திரும்ப பெறவேண்டுமென்றும் வேண்டுகோள் விடுத்திருக்கிறார்.

அவரது திரைப்படங்கள் அனைத்தும் துருக்கியின் கலாச்சாரப் பின்னணியுடன் படமெடுக்கப்பட்டன. குறிப்பாக ஜெர்மனில் வாழும் இளைஞர்கள் அனுபவிக்கும் இனவாத பிரச்சனைகளைப் பற்றியவை. அவரது முதல் படமான ரிஹிஸிஞீ ஹிழிஞி ஷிசிபிவிணிஸிஞீலிளிஷி ல் வரும் கேப்ரியல் என்ற துருக்கிய இளைஞன், பாபி என்ற செர்பிய இளைஞன், கோஸ்டா என்ற கிரேக்க இளைஞன் ஆகியோர் நண்பர்கள். இவர்கள் மூவரும் குழுவாக ஹாம்பெர்க் அருகே உள்ள மாவட்டத்தில் களவு போன்ற சிற்சில குற்றங்களை செய்து வருபவர்கள். அவரது முக்கிய திரைப்படமான சொர்க்கத்தின் விளிம்பு(ஜிலீமீ ணிபீரீமீ ளியீ ஜிலீமீ பிமீணீஸ்மீஸீ) இரு நாடுகளில் நடைபெறும் நிகழ்வுகளைக் கொண்டு படமெடுக்கப்பட்டதாகும். அப்படத்தில் துருக்கிய குடியேறிகள் அதிகமாக உள்ள ஜெர்மனில் ஃப்ரிமென் நகரத்தில் கதையின் முதல் பகுதி தொடங்குகிறது. மனைவியை இழந்த ஓய்வு பெற்ற அலி கூட ஒரு ஜெர்மன் வாழ் துருக்கியர் தான். தனது தனிமையை தனிக்க விபச்சாரிகள் வீதிக்குள் இறங்கி நடக்கிறார். எஸ்டெர் என்ற விபச்சாரியை அடைகிறார். அவர்களது தொடர்பு தொடர்கின்றது. இதனிடைய துருக்கிய இளைஞர்குழு, அவள் ஒரு துருக்கியர் என்பதை உணர்ந்து கொண்டு விபச்சாரத்தில் ஈடுபடுவதை நிறுத்தும் படி வலியுறுத்தி வருகிறது. இப்படியான நிலையில் அவள் தனது விபச்சாரத்தை தொடர முடியாத நிலை ஏற்படுகிறது. ஒருமுறை எஸ்தெரை தன்னோடு வந்து வசிக்கும்படி அழைக்கிறார் அலி. தான் ஒண்டியாக இருப்பதாகவும் தனக்கென்று ஒரு பெண்ணை தேடிக்கொண்டிருப்பதாகவும் கூறுகிறார் அவர். இந்த விபச்சாரம் மூலமாக அவளுக்கு கிடைக்கும் தொகைக்கு ஈடான தொகையை தனது ஓய்வூதியத்திலிருந்து தருவதாகவும் கூறுகிறார். அதை மறுத்து விடுகிறாள் எஸ்தெர். இருப்பினும் தனது செல் எண்ணை தந்துவிட்டுச் செல்கிறார் அலி. பிறகு துருக்கிய இளைஞர்களின் மிரட்டலால் அலியை தேடி வருகிறாள் எஸ்டெர். அப்போது அலி குதிரைப் பந்தய அரங்கில் அமர்ந்து மது அருந்திகொண்டிருக்கிறார். “நீங்கள் அன்று கூறியது நிஜமானது தானா?” என்கிறாள் எஸ்டெர்.
“ஆம், உனக்கு மாதம் எவ்வளவு கிடைக்கிறது?” என்கிறார் அலி.
அவளோ, அந்த நாட்டின் ரூபாயின்படி 3000 ஆயிரம் என்கிறாள். நான் போதுமான அளவு ஓய்வூதியம் வாங்குகிறேன். அதனோடு வங்கியிலும் பணம் வைத்துள்ளேன். நிலமும், சில சொத்துகளும் வைத்துள்ளேன். பணநெருக்கடி ஏற்பட்டால், பேராசியராக இருக்கும் எனது மகனிடம் வாங்கி கொள்ளலாம். அவன் நன்றாக சம்பாதிக்கிறான். அவன் நல்லவன்உதவுவான் என்கிறார்.
ஒரு நாள் அலியும் அவரது மகன் நிஜாத்'தும் எஸ்டெரோடு இரவு உணவு சாப்பிட்டுக் கொண்டிருக்கிறார்கள். அலி அதிகமாக மது அருந்தி விடுகிறார். அவரை படுக்கையில் படுக்க வைத்துவிட்டு வருகிறான் நிஜாத். அதன் பிறகு எஸ்டெரோடு உரையாடுகிறான் நிஜாத்.
“எனது தந்தையை உங்களுக்கு எப்படித் தெரியும்?” என்று அவளிடம் கேட்கிறான்.
“அவர் என்னிடம் வருவார்” என்று எதார்த்தமாகவே எஸ்டெர் கூறுகிறாள்.
“அப்படியென்றால்...”
“உங்களிடம் ஏதும் கூறவில்லையா உங்கள் தந்தை”“இல்லை”
“நான் அனைவரையும் எளிதில் அணுகி இன்பம் தருபவள்”
“அப்படியென்றால்,”“ஆம், நான் ஒரு விபச்சாரி”
அப்போது எஸ்டெரை அலி அழைக்கிறார். அவள் செல்கிறாள். சிறிது நேரத்திற்கெல்லாம் நிஜாத் என்று எஸ்தெர் கூக்குரலிடுகிறாள். அலி படுக்கையில் மூர்ச்சை ஆகி கிடக்கிறார். அலிக்கு மாரடைப்பு ஏற்பட்டு விடுகிறது. மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகிறார்.
உடல் தேர்ந்து வீட்டிற்கு வரும் அலி, எஸ்டெரை உறவு கொள்ள கட்டாயப்படுத்துகிறார். அவள் மறுக்கிறாள். கன்னத்தில் அறைகையில் மயங்கி விழும் எஸ்தெர், இறந்து விடுகிறாள். அலி கதறுகிறார். துருக்கியில் படித்துகொண்டிருக்கும் தன் மகளுக்காக விபச்சாரம் செய்து கொண்டிருந்த எஸ்டெரின் கதை முடிவடைகிறது. முன்னதாக தனது கதையை நிஜாத்திடம் கூறிய எஸ்டெர், தான் ஒரு விபச்சாரி என்று மகளுக்கு தெரியாது என்றும், அவளிடம் தான் ஒரு செருப்புக்கடையில் பணிபுரிவதாக கூறியிருப்பதாகவும் நிஜாத்திடம் கூறியிருந்தாள். அவளை படிக்கவைப்பதுதான் தனது நோக்கமென்று கூறியிருந்தாள்.
அடுத்தக் கட்டமாக படம் துருக்கியை நோக்கி நகர்கிறது. எஸ்டெரின் உயிரற்ற உடல் துருக்கிக்குக் கொண்டுசெல்லப்படுகிறது. அவரது உறவினர்களோடு சேர்ந்து நிஜாத்தும் அவளது உடலை நல்லடக்கம் செய்கிறார். எஸ்டெரின் மகளான ஆய்டென் பற்றிய விவரங்கள் அவளது உறவினர்களுக்கே தெரியாத நிலை. பல மாதங்களுக்கு முன்னரே அவள் தங்களிடமிருந்து தொடர்பை இழந்து விட்டதாக கூறுகிறார்கள். அவளது குடும்ப புகைப்பட ஆல்பம் மட்டுமே எஞ்சி இருக்கிறது. அதில் கூட அவளது சமீபத்திய புகைப்படம் ஏதும் இல்லை. அவளது சிறு வயது படங்கள் மட்டுமே உள்ளன. ஆல்பத்தில் உள்ள அவளது தாய் எஸ்டெரின் புகைப்படம் ஒன்றை தன்வசம் எடுத்துக்கொள்கிறான் நிஜாத்.
ஆய்டெனை தேடும் படலத்தைத் தொடர்கிறான் நிஜாத். இதனிடையே படத்தின் அடுத்த கட்டம் லாட்ஸ்’ஸின் மரணம் என்ற பகுதிக்குள் செல்கிறது. இருவேறு கதைகள். தேடுதல் என்ற அம்சம் பிரதானமாகிறது. படத்தின் போக்கு என்பது குறுக்கு வெட்டாக ஒரு நிகழ்வு ஜெர்மனியிலும் மற்றொரு நிகழ்வு துருக்கியிலுமாக மாறி மாறி தேடுதல் என்ற ஒன்றோடு சம்பவங்கள் கோர்க்கப்படுகிறது. “லாட்டி’யின் மரணம்,” பகுதியின் தொடக்கத்தில் பெரும் திரளான மக்கள் பேரணி காண்பிக்கப்படுகிறது. துருக்கியின் குர்திஷ் இனத் தலைவரான ஓக்லேன் தலைமையிலான இடது சாரி உழைக்கும் மக்கள் கட்சியின் பேரணி வருகிறது. ஆய்டென் அக்கட்சியின் உறுப்பினர். பேரணியில் நடக்கும் சலசலப்புகளில் அதிகாரி ஒருவரின் துப்பாக்கி தவறி விழ அதை பற்றிகொண்டு அவள் ஓடுகிறாள். அப்போது அவளது செல்பேசியைத் தவற விட்டுகிறாள். தான் எடுத்து வந்த துப்பாக்கியை ஓர் அடுக்குமாடி கட்டிடத்தின் புகைக்கூண்டில் போட்டு விடுகிறாள். இதனிடையே ஆய்டேன் தங்கியிருக்கும் இடத்தை போலீசார் சோதனையிட்டு அவளது அறைத்தோழிகளை கைது செய்கிறார்கள். இனி துருக்கியில் ஆய்டெனால் தங்கியிருக்க முடியாத சூழ்நிலை. ஆகையால் “குல் கொர்க்கமாஸ்” என்ற போலியான பெயர் கொண்ட பாஸ்போர்ட் மூலம் ஜெர்மன் நாட்டிற்கு வருகிறாள். இடதுசாரி குர்து இன முஸ்லிம் இளைஞர்கள் இருவர் அவளை அழைத்துப் போகிறார்கள். நாளைக்கு தருவதாக கூறி அவர்களிடம் செலவுக்கு 100 யூரோ கேட்கிறாள். தனது செல்பேசி தொலைந்ததால் தனது தாய் எஸ்டெரின் தொடர்பை அவள் இழந்துவிடுகிறாள். ஃப்ரிமென் நகரத்தில் உள்ள செருப்புக் கடைகளிலெல்லாம் தனது தாயைப்பற்றி விசாரிக்கிறாள். ஆனால் சாதகமான பதில்களெதுவும் அவளுக்குக் கிடைக்கவில்லை. இதனிடையே வாங்கிய பணத்திற்காக தனது ஹோட்டலில் வைட்டராக பணிபுரிமாறு கூறுகிறான் அந்த இடதுசாரி நண்பன். அவள் மறுக்கவே அங்கிருந்து விரட்டப்படுகிறாள் ஆய்டென்.
தெருக்களிலும் சாலையோரங்களிலும், ஏன் ஒரு முறை நிஜாத் பயிற்றுவித்துக் கொண்டிருக்கும் அரங்கத்திலும் கூட அவள் படுத்துறங்குகிறாள். ஒரு நாள் வீதியில் லாட்ஸ்’ஸை சந்திக்கிறாள். அவளிடம் தனக்கு உதவும்படி கோருகிறாள். இப்படியாக அவர்கள் இருவருக்கிடையே நட்பு அரும்புகிறது. இருவரின் நட்பு லெஸ்பியன் உறவாக மாறுகிறது. லாட்ஸ்’ஸின் தாய்க்கு ஆய்டெனின் வருகை ஆரம்பத்திலிருந்தே பிடிக்க வில்லை. ஒரு நாள் இருவருக்கும் இடையேயான உரையாடல் வாக்குவாதத்தில் முடிகிறது. ஆய்டென் வெளியேறுகிறாள். வீட்டிலிருந்து கீழிறங்கி உட்கார்ந்து அழுகிறாள். அப்போது லாட்ஸ் வருகிறாள். ஆய்டென் அருகே அமர்கிறாள். “எனது தாயை கண்டுபிடிக்க உதவுவாயா,” என்று கதறுகிறாள் அவள். இருவரும் காரில் ஏறி செல்கிறார்கள். தேடுதல் தொடர்கிறது. திரைப்படத்தின் இந்த கட்டத்தில் தான் இயக்குநர் தனது திரைக்கதை உத்தியை பிரதானமான ஒன்றாக அமைக்கிறார். ஜெர்மானியப் பெண்ணான லாட்டி’யின் அகால மரணப்பகுதி என்பது எஸ்டெரின் மரணத்திற்கு முன் நடக்கிறது. நிஜாத் பயிற்றுவிக்கும் அரங்கில் ஆய்டென் உறங்குவதும், தனது தோழி லாட்டியுடன் சேர்ந்து எஸ்தெரைத் தேடும் போது நிஜாத்தும் எஸ்டெரும் பேருந்தில் ஆய்டெனைக் கடந்து பயணித்து செல்வதுமாக திரைக்கதையை அமைத்திருக்கிறார். திரைக்கதை சொல்வதில் இது தான் நான்- லீனியர் பாணி. நேர்கோடற்று திரைக்கதை நகர்கிறது.
எஸ்தெரைத் தேடுதல் படலத்தின் இடையே, இரவுவேளையில் போலீசாரால் அவர்களது கார் நிறுத்தப்படுகிறது. சோதனையில் ஆவணங்களை சரிபார்த்துக் கொண்டிருக்கும்போது ஆய்டென் தப்பித்து ஓட முயற்சித்து பிடிபடுகிறாள். அப்போது ‘அடைக்கலம் , அடைக்கலம்,’ என்று கத்துகிறாள். அவளைப் பிடித்து விசாரணை மேற்கொள்கிறார்கள். ஆய்டெனின் அடைக்கலம் கோரும் தாக்கல் கீழ்க்கண்ட காரணங்களால் நிராகரிக்கப்படுவதாக கூறப்படுகிறது: எவரொருவர் மதம், இனம், தேசியம், சமூக, அரசியல் ஆகியவை தொடர்பாக தங்களது சுதந்திரத்திற்கும், ஆன்மாவுக்கும் எதிரான சூழ்நிலையோ அல்லது ஒடுக்குமுறையோ அல்லது அவர்களின் உயிருக்கோ அல்லது உடலுக்கோ பாதகம் ஏற்படும்பட்சத்தில்தான் அடைக்கலம் தரப்படும்.
ஆய்டென் துருக்கிக்கு மீண்டும் அனுப்பப்படுகிறாள். துருக்கி சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஆய்டெனை காப்பாற்ற லாட்டியும் துருக்கி புறப்படுகிறாள். அவளது தாய் அங்கு செல்ல எதிர்ப்பு தெரிவிக்கிறாள். அதைமீறி அவள் புறப்படுகிறாள். திரைப்படத்தின் அடுத்த நகர்வு துருக்கியிலிருந்து தொடர்கிறது. அங்கு ஆய்டெனை சந்திக்க மறுப்பு தெரிவிக்கப்படுகிறது. ஆயுதம் தாங்கிய பயங்கரவாதக் குழுவுடன் ஆய்டென் தொடர்பு வைத்திருந்ததாக அவள் மீது குற்றஞ்சாட்டப்பட்டிருக்கிறது............
...................
................
மந்திரச்சிமிழ் இதழ்-2-ல்

Sunday, 4 April 2010

மந்திரச்சிமிழ் (காலாண்டிதழ்) இதழ்:2 & 3




அன்பார்ந்த வாசகர்களுக்கு முதலில் எனது மன்னிப்பைக் கோரிக்கொள்கிறேன். இதழ் வெகுவாக காலதாமதமாகிவிட்டது. கடந்த இதழில் குறிப்பிட்டது போல் ஏற்பட்ட வறட்சி சூழ்நிலை மற்றும் போர்ஹேஸ் சிறப்பிதழ் தயாரிப்பதில் எற்பட்ட கால தாமதம் காரணமாக இந்நிலை ஏற்பட்டு விட்டது. முதல் இதழுக்கு வாசகர்கள் தந்த ஓரளவு ஆதரவையும் பெருமிதமாகக் கொண்டு இதழை முனைப்பாக தயாரிக்கும் முயற்சியல் ஈடுபட்டேன். எனினும் சில நல்லெண்ணம் கொண்ட நண்பர்கள் மன ரீதியாக எதிர்மறை உற்சாகத்தை அளித்து பேருதவி புரிந்தனர். இன்றைய சூழலில் ஒரு சிற்றிதழ் நடத்துவது என்பது எத்தகைய சங்கடங்களை ஏற்படுத்தும் என்று அறியாதவன் நான் அல்ல. சென்ற இதழுக்கு தன்முனைப்புடன் சில விளம்பர உதவிகளை தந்த நண்பர்களும் இதழின் போக்கைக் கண்டு அன்புடன் வாபஸ் பெற்றுகொண்டனர். இருப்பினும் அதுவே நமது முதல் வெற்றி. கார்ப்ரேட்களைக் காட்டிலும் அதன் அடிவருடிகள் மிக சிரத்தையுடன் தங்கள் பணிகளை மேற்கொள்கிறார்கள்.
இவைகளைக் கூட தாங்கிக் கொள்ளலாம். பன்றிக்காய்ச்சல்தான் பெரும் தொல்லையாக இருக்கிறது. அது உயிரை மெய்யாகவே பாதிக்கிறது. தமிழில் சிறுபத்திரிக்கைக்கான வெற்றிடத்தை உணர்ந்துதான் இதழை நடத்த முனைந்து செயலாற்றி வருகிறோம். வாசகர்கள் தங்களது கருத்துகளை தெரிவிக்கும்படி சென்ற இதழிலிலேயே குறிப்பிட்டிருந்தேன். அதேபோல் இதழின் அரசியலுக்கேற்ப படைப்பாக்கங்களை கோரியிருந்தேன். எந்தவிதப் பயனும் இல்லை. சுற்றுச்சூழல் குறித்து தீவிரமாக பேசப்பட்டு வரும் இந்நாட்களில் நாம் ஏன் காகிதத்தை வீணடிக்க வேண்டும் என்ற எண்ணமும் கூட ஏற்பட்டது. இருப்பினும் சில நிறுவனங்களின் புத்தக வெளியீட்டிற்கு, பெரும் அரசியல் தனவான்களும், திரைப்பட மேதமைகளும் திரண்டு வந்து மேடையேறி ஆதரவளித்ததைக் கண்டு நாங்களும் உற்சாகம் அடைந்து மனதை மாற்றிகொண்டு இதழை நடத்த ஆர்வத்துடனும், குதூகலத்துடனும் இறங்கினோம். பல லட்சக்கணக்கான ரூபாய்கள் செலவளித்து காகிதங்களை வீணடிப்பதைக் காட்டிலும் சொற்பமாக சில ஆயிரங்கள் மட்டும் செலவழிப்பதால் எந்த தீங்கும் நேர்ந்து விடாது. இவ்விதழ் இரட்டை இதழாக மலர்ந்துள்ளது. சென்ற இதழின் தொடர்ச்சியாக இரண்டு ஃபிரஞ்ச் மொழி சிறுகதைகளின் மொழியாக்கங்களும், புதிய பகுதியாக குறும் படப்பகுதியும் இணைக்கப்பட்டுள்ளது.இனி அடுத்த இதழில் புத்தக விமர்சனப்பகுதியும் புதிதாக சேர்க்க எண்ணியுள்ளோம். புத்தகங்கள் வரவேற்கப் படுகின்றன.
தமிழ் இலக்கிய சூழலில் போர்ஹேஸ் வெகுவாக பேசப்பட்டு விட்டார். இனி என்ன உள்ளது என்று வாசிப்போர் கேட்கக்கூடும். போர்ஹேஸ் குறித்து
முழுமையாக இதுவரை தமிழில் பேசப்பட வில்லை என்பதே எனது வாதம். அவரைப் பற்றி வெளிவந்துள்ள விஷயங்கள் அனைத்தும் வெறும் ஆரம்ப அரிச்சுவடிகளே. அவரைப்பற்றிய விரிவான வாசிப்பின் தொடக்கமே எங்களது பணி.
அடுத்த இதழ் வரும் போது தமிழ் இலக்கியம் சுபிக்ஷம் பெற்றுவிடும், நமது தானைத் தலைவர் நடத்தும் செம்மொழி மாநாட்டினால் அப்பயன் கிட்டி விடும். இனி 1 ரூபாய் அரிசி போலவும், இலவச வண்ணத் தொலைக்காட்சி போலவும் தமிழும் மலிவு பெறும்...

மந்திரச்சிமிழ் (காலாண்டிதழ்)

க. செண்பகநாதன்,
24/17. சி.பி.டபிள்யூ.டி குடியிருப்பு.
கே. கே. நகர்.
சென்னை: 600078.

செல் : 9894931312

Tuesday, 13 October 2009

மந்திரச்சிமிழ் (காலாண்டிதழ்)


பதிப்பாசிரியர்
க.செண்பகநாதன்
ஆசிரியர்
செல்வ புவியரசன்
உதவி ஆசிரியர்
கிருஷ்ணமூர்த்தி
ஆலோசகர்
சுமா ஜெயராம்

க. செண்பகநாதன்,
24/17. சி.பி.டபிள்யூ.டி குடியிருப்பு.
கே. கே. நகர்.
சென்னை: 600078.

செல் : 9894931312

தமிழ்ச்சூழலில் சிறுபத்திரிக்கைகளுக்கான வெளி என்பது தீர்க்கமற்றதாய் இருந்து வருகிறது. காலத்திற்கு ஏற்றதான வெளிப்பாடு என்பது அறவே இல்லை. இத்தகைய நிலையில் தான் இந்த இதழை தொடங்க வேண்டியுள்ளது. அதே போல் இதழ் முழுவதும் நான் வியாபித்திருக்கும் நிலையும் துரதிருஷ்டவசமாக ஏற்பட்டுள்ளது. உரிய படைப்புகளுக்காக 4 மாதங்களுக்கு மேல் காத்திருந்துவிட்டு நானே சில கட்டுரைகளை எழுதினேன். இத்தகைய சூழலில் உயரிய படைப்பாளிகள் மற்றும் சிந்தனையாளர்களுக்கான பஞ்சம் தமிழில் அருகி வருவதை கூர்ந்து கவனித்து வரும் நான் நன்றாகவே உணர்ந்துள்ளேன். சிறு பத்திரிக்கைகளுக்கென்று ஓர் அரசியல் உண்டு. அந்த அரசியல்தான் எழுத்தின் போக்கை எதிர்காலத்திற்கு வித்திடுவது. புறவுலகில் ஏற்பட்டு வரும் மாற்றங்கள், அதனால் அகம் சார்ந்து ஏற்படும் விளைவுகள், உலகமயமாதல் குறித்த சந்தேகங்கள், நியாயப்பாடுகள். இன்றைய பொருளாதார சிக்கல்கள், மொழியியல் ஆகியவை குறித்து வரும் இதழ்களில் விரிவாக அலசி ஆராயப்படும். உலகளாவிய படைப்பாக்கம், அரசியல் மற்றும் ஊடகங்கள் மீது எழுப்பப்படும் விமர்சனங்கள் குறித்தும், கடந்த மற்றும் நிகழ்கால சிந்தனைப் போக்குகள் குறித்தும் உரிய எழுத்தாக்கங்கள் வரவேற்கப்படுகின்றன.
இந்த இதழை வாசகர்களாகிய உங்களிடம் ஒப்படைக்கிறேன். இதன் சாதக பாதகங்களை உரிய விமர்சனங்களாக ஒப்படையுங்கள். ஆனால் செம்மையான படைப்புகள் மற்றும் உருப்படியான கட்டுரைகள் மட்டுமே இதழில் பிரசுரம் செய்யப்படும் என்பதை உறுதியுடன் கூற விரும்புகிறேன். மந்திரச்சிமிழ் இதழில் நவநவீன சிந்தனைகள் , மாற்று மற்றும் நுண்ணரசியல், மாற்று ஊடகம்(உலகளாவிய), நேர்கோடற்ற படைப்பாக்கம் ஆகியவையே முதன்மையாக கொள்ளப்படும் என்பதனையும் தெளிவாக்க விரும்புகிறேன். காலாவதியான பிம்பங்களுக்கும், பெரும் கதையாடல்களுக்கும் இங்கே சிறிதும் இடமில்லை என்பதை உறுதியாக கூறிக் கொள்ள விரும்புகிறேன். படைப்புகள் மற்றும் கட்டுரைகள் கிடைக்கப்பெறாததற்கு இதுவும் ஒரு காரணமே. அப்படி ஒரு நிலை தொடர்ந்து ஏற்பட்டால், அதனால் எக்காரணத்தைக் கொண்டும் இதழ் நிறுத்தப்பட மாட்டாது. இதழின் அரசியலைக் கொண்டிருக்கும் படைப்பாளிகள் கொண்டோ அல்லது நானோ இதழை நிரப்புவோம் என்று கூறிக் கொள்கிறேன். சமகால பிரச்சானைகள் விருப்புவெறுப்பின்றி பிரசுரிக்கப்படும் என்பதையும் கூற விரும்புகிறேன்.

- பதிப்பாசிரியர்

இதழின் உள்ளடக்கம்

பிராந்தியவாதம்: தேசியத்தின் இரட்டைமுகம்-
செல்வ புவியரசன்
4


உலகமயமாதலும் அதன் இயலாமையும்-
க.செண்பகநாதன்
9

வெண்ணிறம் கொண்ட கரும்பறவை-
ஆல்பெரட் டி முஸோட்
(தமிழில்:க. செண்பகநாதன் 13

ஷியாம் பெனகல் - மாற்று சினிமாவுக்கான இந்திய முகம்-
க. செண்பகநாதன்
30

பருவ காலங்களுடன் ஊடாடும் வாழ்வின் சரிதம்-
க. செண்பகநாதன்
44

பின்காலனிய நாடகங்கள்:
ஏர்னஸ்ட் தளையசிங்கம் மெக்கன்டயரை முன்வைத்து -
தமிழச்சி தங்க பாண்டியன்
50

திருச்சாரணத்து மலைக் கோயில் -
ப. சோழநாடன் 55

Friday, 2 October 2009

ஷியாம் பெனகல்:: நேர்காணல்


கேள்வி: நீங்கள் ஹதராபாத்தில் வளர்ந்தவர். உங்களது பாலிய பருவத்தில் ஏற்பட்ட பல்வேறு பலவிதமான பாதிப்புகளை கூறுங்கள். ஏனெனில் எதையும் கருத் தோற்றம் கொள்ள கூடிய பருவம் அது இல்லவே?
ஷியாம் பெனகல்: ஒன்றை தெரிந்து கொள்ளுங்கள். இப்போதும் அப்படியே குழந்தை பருவத்துடன், கருத்தில் ஏதும் ஊன்றி இருப்பதாக நான் எண்ணவில்லை. இளம் பிரயாயத்தில் எந்தவொரு கருத்தாக்கங்களிலும் ஆட்படாத்தைப் போல் தான் இப்போதும் நான் உள்ளேன். அப்படி எதாவது ஒரு கருத்தாக்கத்தில் ஆட்ப்பட்டு விட்டால், அத்தகையது மிக பயங்கரமானது. அப்படியாக கருத்தாக்கத்திற்குள் ஆட்பட்டு விட்டால் புதிதாக கற்பது என்பது இல்லாமல் போய் விடும். அத்தகையது வாழ்வதை நிறுத்திக் கொண்டது போலானது. அத்தகைய நிலை எனக்கு பிடிக்காத ஒன்று. ஆனால் எனது இளைய வயதில் பாதித்தவைகள் குறித்து அறிய விரும்பிகிறீர்கள் என்றே நினைக்கிறேன்? சிறு பிரயாயத்தில் எல்லோரையும் போல் எனக்கும் குடும்பம் இருந்தது. அதில் சாதகமும் இருந்தது, பாதகமும் இருந்தது. சாதகமானவைகளை மட்டுமே எடுத்துகொண்டேன். அதில் ஒரு விஷயம், எங்கள் குடும்பம் மிக பெரியது. பரந்ததொரு மனவிலாசத்தை அடு அளித்து அகர்ஷித்தது. எனது உறவினர்கள் பல வித்தியாசமான மனவிலாசத்தை தங்களுக்குள் கொண்டிருந்தார்கள். உதாரணத்திற்கு, எங்கள் இடத்திலிருந்து உடல்நலம் தேறிக்கொண்டிருந்த மாமா, நல்ல இலக்கியங்களை அறிமுகப்படுத்தினார். அத்தருணத்திலிருந்து எனது ஆர்வமும் தொடங்கியது. எனது மூத்த சகோதரர் ஓர் ஓவியர். அதனால் தான் ஓவியம் பற்றிய ஆர்வமும் அரும்பியது. திரைப்படம் மீதும் அவர் மிகுந்த ஆர்வம் கொண்டிருந்ததினால் எனது ஆர்வமும் திரைப்படத்தை நோக்கியும் ஊடிச்செல்ல செய்தது. அந்த தருணத்தில் பல்வேறு சம்பவங்களை பற்றி நோக்கியதால் பல விதமான விஷயங்கள் சாதகமாக எனது சிறு பிரயாயத்திலேயே குடிப்புகுந்து ஆர்வமூட்ட செய்தது.

கேள்வி: விளம்பர நிறுவனங்களுக்கான படியெழுத்தராக(copy-writer) தொழிலை தொடங்கிய நீங்கள், பின்னர் வணிக ரீதியான திரைப்படங்களையும், பல்வேறு விஷயங்கள் குறித்து ஆவணப்படங்களையும்-அதாவது கலை, அறிவியல், மானுடவியல் போல் பல விஷயஙள் குறித்த ஆவணப்படங்களை உங்களுக்கு நல்ல பெயரை தந்தன. தொடக்க காலத்தில் நேர்ந்த இறுக்கந் தொய்ந்த பணியே தேர்ந்த திரைப்படப் படைப்பாளியாக உங்களை வளர்த்தெடுத்ததாக நினைக்கிறீர்களா?
ஷியாம் பெனகல்: நல்ல கேள்வி, விளம்பர நிறுவனங்களுக்கு நான் சென்றதற்கு முதல் காரணம் ஹதராபாத்தில் வளர்ந்ததினால் உண்டானது. அந்த காலக்கட்டத்தில் திரைப்பட பயிலகங்கள் ஏதும் அங்கில்லை. திரைப்பட படைப்பாளியாகும் விருப்பத்தை அனைவரும் எள்ளி நகையாடினார்கள். எவரும் அக்கரை காட்டாத நிலை. ஆனால் எனது ஆர்வம் ஒரு திரைப்பட படைப்பாளியாக திகழ வேண்டுமென்பதிலேயே இருந்தது. நிரைப்படத் தொழிலுக்கு ஹதராபாத் எந்த விதத்திலும் வாய்ப்புக்கு உகந்ததாக இல்லை. அக்காலக்கட்டத்தில், பூனாவில் உள்ள FTII - யும் தோன்றவில்லை. அப்போது அது அங்கிருந்தாலும் எனது தந்தையால் அங்கு அனுப்பி படிக்க வைத்திருக்க வாய்ப்பும் வசதியும் இல்லை. அடுத்ததாக பம்பாய் சென்று திரைப்படங்களுக்கு எவ்வகையிலாவது நுழையும் வாய்ப்பு ஒன்றிருந்தது. எவரொருவரிடமும் இணைந்து பணியாற்றும் நிலை எனக்கு அறவே பிடிக்க வில்லை. ஏனெனில் அப்போது வெளிவந்து கொண்டிருந்த பெருவகையான
திரைபடங்களை ஏற்று பின்பற்ற முடியாத மனநிலை எனக்கிருந்தது. அந்த படங்கினால் உண்டாகும் பாதிப்பை மனரீதியாக உள்வாங்கிக் கொள் நான் விரும்ப வில்லை. அதனால் தான் விளம்பர நிறுவனங்களுக்கு படியெழுதராக சேர்ந்தேன். கிறகு வணிக ரீதியான வாய்ப்பு கிடைத்தன. அவைகளை செய்ததன் மூலம் தின்ப்படங்கள் படைப்பதை பற்றி உண்மையாக கற்றுகொண்டேன். அதிலிருந்து எனது நிலை எவ்வகையிலும் தாழ்த்திக் கொள்ள வில்லை என்பது மட்டும் நிதர்சனம்.
கேள்வி: இப்போது உங்களது முழு நீள திரைப்படத்திற்கு வருகிறேன். உள்களது முதல் மூன்று படங்களான அங்கூர், நிஷாந்து, மந்தன், ஆகியவைகள்(trilogy) முத்தொடர் வகையை சேர்ந்தது. இந்திய சமூகத்தில் ஒடுக்கப்பட்டும், சுரண்டப்பட்டும் இருக்கும் மக்கள் நிலையைக் பற்றியது. இத்தகைய நிலையை நேரிடையாக அப்படங்கள் விவரிக்கும் தன்மை வாய்ந்தவைகள். இவற்றிலிருந்து விலகி பூமிக்காவில், நவயுத்தியை பயன்படுத்தினீர்கள். இப்படியான பரிணாமம் உங்களுக்குள் எப்படி நிகழ்ந்தது என்று கூறுங்கள்?

ஷியாம் பெனகல்: நல்ல கேள்வி. அங்கூர், நிஷாந்த், மந்தன் ஆகிய திரைப்படங்கள் முத்தொடர் வகையை சேர்ந்தது அல்ல. ஒரு விஷயத்தை பல கோணங்கள் கொண்டு எடுக்கப்பட்டதாகும். ஏனெனில், நான் மாற்றத்தின் ஆதாரங்களையும், சமூக மாற்றத்தையும் எப்போதும் விரும்புகிறவன். திரைப்படத்தில், பொருள் உள்ளடக்கத்தின் மீது எப்போதும் அக்கரை கொண்டிருப்பவன் என்பதோடு அதன் வடிவ நெறிளோடும் அதனையும் தாண்டி பரந்து விரிந்த தன்மையுடனும் நான் தொடங்கியதன் விளைவாகத் தான் பூமிக்காவை உருவாக்கினேன். பூமிக்காவின் திரைப்பட உருவாக்க வடிவம் அனைவரையும் மன நெகிழச் செய்தது. அதற்கு காரணம் அந்த திரைப்படத்தில் நான் கையாண்ட பொருள் உள்ளடக்கம். அதிலிருந்து இருபத்தி ஐந்து வருடங்களாகவே இவ்வகையே பரிணாம வளர்ச்சியை நான் அடைந்துகொண்டிருக்கிறேன்.

கேள்வி: பூமிக்காவுக்கு பிறகு நீங்கள் எடுத்த மண்டி, ஒரு மயிற்கல். அதில்(உங்கள் பாணி) காட்சியமைப்பு மற்றும் வண்ண அமைப்புகள் மீது உங்களது பணி குறிப்பிடத்தக்கதாக உள்ளது. விபச்சார விடுதியின் வன்ம்ம நிறக்கூடு ரசிக்கத்தக்க மனப்பாங்குடன் காட்சிவெளியில் வெகுவாக அகர்ஷித்திருந்தது நேரிடையாக கதையிலிருந்து விலகி, நவ மாறுதலுடன் பூமிக்காவைப் போலவே இதுவும் சுராசியமான உதாரணம். அந்த திரைப்படத்தின் உள்ளடக்கம் கூட அவ்வடிவம் தானே?

ஷியாம் பெனகல்: ஆம், உண்மை தான். நேர் கோட்டில் கதை சொல்வது வரைமுறைக்கு உட்பட்டே நிகழ்கிறது. யதார்த்தத்தின் கருத்துருவம் தான் உண்மையில் உங்களுக்கு முக்கியமென்றால், இயல்பு மற்றும் யதார்த்தம் மீது அக்கரைக் கொள்ள அவசியமில்லை. அவை இரண்டு வகையான வெவ்வேறு விஷயங்களாக உள்ளன. யதார்த்ததின் கருத்துருவத்திற்கும், யதார்த்த படங்களை படைப்பதற்கும் நிறைய வேறுபாடுகள் உண்டு. யதார்த்தம் எப்போதும் பல்வேறு கோணங்களை கொண்டிருக்கிறது. அவை நேரிடையாக, அதாவது A-B, C-D......Z என்று நேர் கோட்டில் தொடர்ச்சியாக நகர அவசியமில்லை. அதனால் தான் பல்வேறு கோணங்களை கொண்டது என்று கூறுகிறேன். அவே ஒற்றை கோட்டில் அமைய வில்லை. அவைகள் அனைத்தையும் ஒன்றிணைத்து புதிய திரை வடிவத்தை கண்டுப்பிடிப்பதே என் திரை வடிவமாகும்.

கேள்வி: புதிய கலாச்சார சூழலில் உள்ளுர் வண்ணத்தை மிக நுட்பமாக கையாளும் திரன் உங்களுக்கு கை வந்திருக்கிறது. அதனுடன் திரைப்படத்தில் கையாளப்படும் களத்திற்கு தகுந்தாற் போல் பொருத்தமாக, மக்களின் அதே இயல்புத் தன்மையுடன் உங்களால் திரைப்படம் எடுக்க முடிந்திருக்கிறதாகவே நான் கருதுகிறேன். அவ்வகையில் நீங்கள் எடுத்த இந்தி மொழி திரைப்படங்களான மந்தன், மண்டி, திரிக்கால், ஜூணுன், அரோகன், சுஸ்மான், சுராஜ்கா சாத்வான் கோடா ஆகியவைகளை நிதர்சனமாக கொள்ளலாம். இப்படங்களில் இந்தி மொழி கையாளப்பட்டிருந்தாலும் அந்தந்த பகுதிக்கேற்ப கலாச்சாரத்தை சிற்சில மாற்றங்களுடன் எடுக்கப்பட்டிருந்தன. இலுப்பினும் மந்தனை குஜராத்தியிலும், திரிக்காலை கொக்கனியிலும், அரோகனை வங்கத்திலும், சுஸ்மானை தெலுங்கிலும் எடுத்திருக்கலாம். இவைகளை இந்தியில் நீங்கள் எடுத்ததற்கு குறிப்பிட்ட காரணம் ஏதேனும் உண்டா?...
ஷியாம் பெனகல்: பம்பாயில் நான் பணியாற்றிக் கொண்டிருந்தேன். இந்தி படங்கள் எடுப்பதற்கு மையமாக பம்பாய் திகழ்ந்து வந்தது. அப்படியென்றால் அது வணிக ரீதியான ஒரு தேசிய சந்தை என்று அர்த்தம். பம்பாயிலிந்து தெலுங்கிலோ அல்லது கன்னடத்திலோ, அல்லது தமிழிலோ அல்லது வங்காளத்திலோ படம் எடுப்பது மிக கடினம். அதனால் தான் நான் இந்தியில் படங்களை உருவாக்கினேன். திரைப்படத்தின் பின்புலச் சூழ்நிலையோடு கலக்கும் அம்சங்களை நான் முக்கியமாக கொள்வேன். அந்த பின் புலத்தைக் கூட வெறும் சூழ்நிலைக் கொண்டு மட்டுமே நான் உருவாக்குவதில்லை. கதாப்பாத்திரங்களோடு முற்றிலுமாக பொருந்தக் கூடிய சூழ்நிலையைத் தான் நான் கையாள்வேன். வேறு வார்த்தைகளில் கூறிவதானால், சூழ்நிலைக் கூட கதையின் ஒரு கதாப்பாத்திரம் தான். மற்றதைக் காட்டிலும் மிகுந்த விளைகளைக் கொண்டது. அதனோடு கூடவே சூழலும், அதற்கேற்ப வாழும் மக்களின் சூழ்நிலையும் எனக்கு முக்கியமாகப்படுகிறது. தெழுங்கில் திரைப்படங்கள் நான் எடுக்க வில்லை என்ற போதிலும், அதற்கு இணங்கினாற் போல் கதாப்பாத்திரங்களை நான் படைத்திருந்தேன். அத்தகையதே முக்கிய பங்கு வகிக்கிறது. அத்தகையது நம்பகத்தன்மையால் விளைந்ததாகும். அதனால் தான் அந்த தொடர்புக்கு மிகுந்த கவணம் செலுத்துவதுண்டு. நீங்கள் அதனை “கலாச்சார முதன்மை” என்ற வார்த்தையைக் கூறிக் கொள்ளலாம். ஏனெனில் கலாச்சாரத் தன்மை மிக அவசியமானது. இல்லையென்றால் கலாச்சாரங்களின் பன்முகத்தன்மையையும், வேறுப்பாட்டையும் அறிந்து கொள்ளாமலேயே போய் விடும். எதையும் பொது கலாச்சாரத் தன்மைக் கொண்டு நீங்கள் பார்க்க முடியாது. அவ்வாறாக ஒன்றைத் தன்மையுடன் எதையும் அணுகினால் தவறான புரிந்துணர்வை ஏற்படுத்தி விடும்.

கேள்வி: அத்தகைய காலச்சார அம்சத்துடன் நீங்கள் எடுத்த அணுக்கிரஹகம் என்ற படம் கூட சுவராசியமானது தானே. மராத்தி எழுத்தாளர் கணோக்கரின் “குண்டுராவை” மையமாக வைத்து எடுக்கப்பட்டது. கதை நிகழ்வான மேற்கு கடற்கரையிலிருந்து கிழக்கு கடற்கரைக்கு மாற்றி அமைத்திருந்தீர்கள். அந்த படம் முக்கிய கதாபாத்திரத்தின் உளவியல் சார்ந்த பொருள் நிலைக் கொண்டு விரியும் மனவெளியை இடையது. பத்திரிக்கையார்களும் விமர்சகர்களும் அதன் குறைத்து மதிப்பிட்டிருந்தார்கள். அந்த படத்தின் மூல கதைக்கான இடத்தை மாற்றி எடுக்கும் போது, அதற்கு தகுந்தாற் போல் சுழல்களை தேர்ந்தெடுத்து வெற்றியடைந்திருப்பதாக நினைக்கிறீர்களா?

ஷியாம் பெனகல்: சரியாக செய்து வெற்றியடைந்திருப்பதாகவே கருதுகிறேன். விசாகப்பட்டிணத்தை சுற்றியுள்ள கிழக்கு கடற்கரைப்பகுதியையும், பிராமணச் சமுகத்தையும், பிராமண கிராமத்தையும் சரியாகவே படமெடுத்திருந்தேன். இடத்திற்கு தகுந்தாற் போலான கதாபாத்திரங்களை மிகச் சரியாகவே அமைந்திருந்ததாகவே நினைக்கிறேன். எனக்கு நன்றாக ஞாபகமிருக்கிறது. இந்த படம் வந்த போது, குறிப்பாக இலக்கிய உலகில் பெரும் விவாதங்கள் ஏற்படுத்தியது. அதன் பிறகு திரைப்பட ஆர்வலர்களுக்கும், திரைப்படத்தை வெகுவாக எதிர்ப்பவருகளுக்கிடையையும் பெரியளவில் விவாதங்கள் ஏற்பட்டன. இதை வைத்தே நீங்கள் தெரிந்துகொள்ளலாம் எத்தகைய பாதிப்பை அந்த படம் ஏற்படுத்தியது என்பதனை. அதனால் தான் இதனை “குடைத்து மதிப்பிடுதல்” என்ற வார்த்தையை நான் ஏற்க மாட்டேன். இதற்கு பதிலாக திரைப்படம் என்பது வெறும் பொழுதுபோக்கு என்பதை தவிர்த்து வேறு விதமாக மக்களை சந்திக்க வைத்திருக்கிறது என்பதையும், அது கலாச்சாரத்தை கொண்டு செலுத்தும் ஊர்தி என்பதாகவும் நான் கொள்வேன்.

கேள்வி: உங்கள் படத்திற்கென்று சிறப்பாக ஒலி அமைப்புகள் கையாள்கிறீர்கள் என்பது தெரிந்த விஷயம். ஆழ்யுணர்வு நினைவிலி மன ஓட்டத்திற்கு இலகுவாக, காட்சியமைப்புக்கு பொறுத்தமா ஒலிக்கொண்ட இசையைக் கூட்டுகிறீர்கள். உதாரணத்திற்கு எடுத்துகொண்டால் நிஷாண்த்தில் உணர்ச்சி மிகுந்த காட்சிகளில் சோக இழையோட நரம்பிசை கருவியின் இசை பயன்படுத்தப்பட்டிருந்தது. அதேப் போல் சப்னா அஸ்மியை கடத்திச் செல்லும் போது கூட தூரத்தில் மனிதர்களின் வினோத சப்தமும், தெரு நாய்கள் ஊளையிடும் ஓசையையும் ஊடாட்டமாக அமைத்திருந்தீர்கள். இவ்வகையான காட்சிகள் பார்வையாளர்கள் மனதிலிருந்து அவ்வளவு எளிதாக அகலாதவைகள். செவிகளோடு கூடி இணையும் காட்சிகளை உருவாக்கும் திறன் உங்களுக்கு கை வருவது எப்படி?

ஷியாம் பெனகல்: திரைப்படத்தைப் பொருத்த வரையில் ஒலி ஒளி அமைப்புகள் முக்கியமானதும், இன்றியமையானதுமாகும். இரண்டுக்கும் சரிசமமான பங்களிப்பு உண்டு. ஒன்று மற்றொன்றுக்கு ஊக்கமளிக்கக் கூடியது. பெரும்பான்மையான படைப்பாளிகள் இந்த நிதர்சனமான உண்மையை தவற விட்டு விடுகிறார்கள். காட்சியை விவரிப்பதற்கே ஒலி அமைப்பு என்று எண்ணி விடுகிறார்கள். இந்த எண்ணத்தை நான் ஏற்றுகொள்ள வில்லை. ஒலியும் காட்சியும் முழுமையுடையதாக இருக்க வேண்டும். இசையை உணர்வோடு கலக்கும் வகையில் கூட்ட வேண்டும். அத்தகைய ஒலி கூட பலதரப்பட்ட இசைக் குவியலாக அமைந்து விட கூடாது. காட்சிக்குரிய பரிணாமத்துடன் திகழ வேண்டும். அதற்கு ஒத்த இணைப் போல பரிணமிக்க வேண்டும். திரைப்படத்தில் அந்த ஒலி காட்சிக்கு புனைவு தந்து நகர்த்தும் திறனை கொண்டிருக்க வேண்டும். அத்தகையதை நீங்கள் உணர்ந்து கொள்ளும் பட்சத்தில் அனைத்தும் உன்னத நிலை பெறும்.

கேள்வி: நீங்கள் எடுத்த கலியுக், மகாபாரத்தின் கதாபாத்திரங்களுக்கு இணையான நவீன கதாபாத்திரங்களைக் கொண்டிருந்தது. இக்கால பல்வேறு தொலைக்காட்சித் தொடர்களுக்கு அது முன்னோடியானதாகும். புராண, இதிகாசங்களை திரைவடிவத்திற்கு உட்படுத்தி எடுக்கப்படும் விதம் பற்றி கூற முடியுமா?

ஷியாம் பெனகல்: இதிகாசங்களை அப்படியே எடுக்க நான் முனைய வில்லை. இருப்பினும் மகாபாரத்திலிருந்து மாதிரியை எடுத்து நான் கையாண்டேன். ஏனெனில் அவைகள் எக்காலத்திற்கும் பொருந்தக் கூடிய பிரதிகள். நான் கலியுக் தொடர் தயாரிக்கையில் மாறி வரும் இந்திய சமூகத்தில் தொழில்த்துறை இயக்கத்தையும் வளர்ச்சியையும் கருத்தில் கருத்தில் கொள்ள வேண்டும் என்ற முனைப்பு எனக்கிருந்தது. குறிப்பாக குடும்பத் தொழிற்சாலை- இப்போது அதன் நிலை என்ன அல்லது அதன் எதிர்காலம் எப்படி- பண்ணை முறை தொழிலிருந்து பெரும் முதலாளித்துவ தொழில் வகைக்கு நகர்ந்து கொண்டிருக்கிறோம். இந்த மாற்றத்தைத் தான் கலியுக்கில் கொண்டு வர நான் எத்தனித்தேன். இப்போது அது தான் பல்வேறு தொலைக்காட்சித் தொடர்களுக்கு கருப்பொருளாக விளங்கி வருகிறது. (புன்னகை) அவர்கள் திரைப்படங்களுக்கு அஞ்சலி செலுத்திக்கொண்டிருக்கிறார்கள் என்பதாகத் தான் என்னால் கூற முடியும்.

கேள்வி: மாற்றம் என்ற கருத்தாக்கம் என்றவுடன் உங்கள் படம் திரிக்கால் தான் எனக்கு ஞாபகம் வருகிறது. அது ஒரு சிக்கலான படம். போர்ச்சுகீஸிடமிருந்து விடுதலை அடைவதற்கு முந்தய கோவாவின் தளம் அது. அந்த படத்தில் மாற்றம் எனும் விஷயம் வலிந்து செய்யப்பட்டிருந்தது. உண்மையான காலகட்டமும், திரைப்படத்தின் காலம் என்ற கருத்தாக்கமும் உங்களை மாற்றம் என்ற தத்துவார்த்தமும், திரைப்படமென்ற மரபொழுக்கத்தில் காலம் மற்றும் வெளியின் அவசியம் உங்களுக்கு உதவியிருப்பதாக எண்ணுகிறீர்களா?
ஷியாம் பெனகல்: காலம் ஒரு சுவராசியமான கருத்துருவம். ஏனெனில் உங்களது மனதிலும் காலமிருக்கிறது. அந்த காலம் யதார்த்தில் சிந்திக்க வைக்கிறது. காலம் பன்முகப்பட்டது மட்டமல்ல. மனிதனூடாக சென்று பெரிதும் அகர்ஷபடுத்தவும் செய்யும். இலக்கியம் இந்த கருத்துருவத்தில் வெகுவாக பயணித்து செல்லக் கூடியதாக இருக்கிறது என்பதனை நீங்கள் அறிந்தது தான். ஆனால் திரைப்படத்தில் காலம் என்ற கருத்துருவத்தை உருவாக்குவது கடினமானது. திரைப்படத்தின் இயல்பு அதற்கு தடையாகவும் இருக்கிறது. இக்கால திரைப்படங்கள் ஒற்றை சிந்தனைக்குள் சிக்கிக் கிடக்கின்றன. தனி நபர் சார்ந்த மனவெளியை வரைந்தெடுப்பது மிக கடினம். உங்களிடம் உள்ள உள்மன விஷயங்களை பலவகை இலகுவான தன்மைகளை வடிவமைக்கக் கூடியது. உதாரணத்திற்கு, நான் ஒரு விஷயத்தை தருகிறேன். இங்கே அமர்ந்து இருநூறு வருடங்களுக்கு முன் எண்ணிப்பாருங்கள். பிறகு விரைந்து அதன் நோக்கி நீங்கள் செயல்படுவீர்கள். அதில் ஒரு தனித்துவமான உணர்வுடன் உங்கள் மனம் பயணிக்கும். அப்போது இலக்கியத்தில் ஒரு வடிவம் பிறக்கும். ஆனால் திரைப்படத்தில் அவ்வளவு எளிதல்ல. எனக்கு அதில் தான் ஆர்வம் அதிகம். திரைப்படத்தில் என்னால் முடிந்த வரை அந்த பிரதேசத்தில் பிரவேசித்து கண்டறிய முயல்வேன். உநாரணத்திற்கு சுராஜ் கே சாத்வான் கோடாவில் அவ்வகை வடிவத்திற்காக உழைத்தேன். சர்தாரி பேகத்தில் அதே நோக்கத்தில் முயற்சித்து கொஞ்சம் வெற்றியும் பெற்றேன்.

கேள்வி: உங்களது படம் சுராஜ் கே சாத்வான் கோடா, தர்மவீர் பாரதியின் இந்தி நாவலை மையமாக வைத்து எடுக்கப்பட்டதாகும். அதன் திரைவடிவம் மிகுந்த சிக்கலும், அகவுணர்வும் கொண்டது. இதைப் போன்ற உருவரை மாதிரியை நீங்கள் இதற்கு முன் செய்ததில்லையே! இந்த படம் கூட புனைவுக்கான வழிவகை என்றே நான் எண்ணுகிறேன். மெய்யியலுக்கும் மீமெய்யியலுக்கும் இடையே மறைப்பொருளான வேறுப்பாட்டை அடூர் கோபால கிருஷ்ணனின் “அனாந்தரம்” படத்தைப் போல் நீங்கள் கையாண்டிருக்கிறீர்கள். அதில் கூட நீங்கள் மீண்டும் ஒருமுறை காலம் என்ற கருத்தாக்கத்தையும், வெளியையும் கையாண்டு வெற்றியடைந்திருக்கிறீர்கள். ரஷிய இயக்குநர் ட்ராக்கோவ்ஸ்கி(Trokovsky)யைப் போல் காலக்கட்டதின் குறிப்பிட்ட காட்சியை உயிரோட்டத்துடன் வேறுப்படுத்திருந்தீர்கள். திரைப்படத்தின் தலையாய பாத்திரம் மூன்று வெவ்வேறு விதமான தொனியை வெளிப்படுத்தும் படி இருந்தது. எப்படி நீங்கள் இவ்வாறெல்லாம் திட்டமிட்டீர்கள்?

ஷியாம் பெனகல்: ஆம், திட்டமிட்டது தான். உண்மையில் அகக் கூறினை வலியுறுத்திக் காட்டவே விரும்பினேன். ஏனெனில் உண்மையின் இயல்பு ஏதோ ஒரு வகையில் மிகவும் ஈர்க்கக் கூடியது. என்னையும் உண்மையின் இயல்புத் தான் மிகவும் ஈர்த்தது. உண்மையில் நிதர்சனத்தை விட வேறு எதுவும் சிறந்ததாக இல்லை. ஏனெனில், அதனுடன் தொடர்பு கொண்டவனைப் பொறுத்தே உண்மையின் அகவெளி புலப்படப்படும். இது கண்கூடான நிகழ்ச்சி போன்றதல்ல. புலன்களால் உணரக்கூடிய நிகழ்வு. உண்மை என்பது ஏதோ ஒன்று என்பதினால் பார்வையாளர்களுக்கு அணுகத்தக்கதாக இருக்க வேண்டும் என்பதே முக்கியமானது. அவ்வாறு செய்வதற்கே பலவலையான ஒலிநுட்ப பண்புகளை நான் கையாண்டேன்.

கேள்வி: தூர்தர்ஷனுக்காக நீங்களெடுத்த பாரத் ஏக் கோஜ் உங்களது பணிகளிலேயே மிக்க ஆர்வத்துடன் கூடிய துணிகர முயற்சி. அதனை மிகச் சிறந்த கலைப்படைப்பாக எண்ணுகிறேன். அதனை ஒரு நவீன காவியமெனவும் கருதுகிறேன். நேருவின் செவ்வியலைக் கொண்டு இந்தியாவின் பண்பாட்டு வரலாற்றினை நீங்கள் காட்சியாக்கிய விதம் மிகவும் பிரமிக்கத்தக்கது. இந்த மெகாத்தொடரைப் பற்றி ஏராளமாக ஆராய்ச்சிகள் நடந்தேறின, ஒவ்வொர் உட்கதையிலும்(episode) உங்களின் மனப்போக்கினை பின்னணிக் குரல் கொண்டு வலியுறுத்திய அதே வேளையில் நேருவின் கருத்தை சூத்திரதாரி முதலிலும் தொடக்கத்திலும் வெளிப்படுத்துவார். வாழ்மொழியாகவும், மரபு வழி நாட்டுப்புற கதையாடருடனும் மற்றும் பாரம்பரிய இயல், இசை, நாட்டியங்களுடனும் பொருத்தமாக நீங்கள் தந்த விதம் உண்மையான இந்தியத் தன்மையை கொண்டிருந்தது. பார்ப்பவர்களுக்கு பல்வேறு கோணத்தில் புதிய அனுபவத்தை தர கூடியவை. அனைவராலும் விரும்புவதற்குரிய இத்தொடரை உருவாக்கியதில் மிகுந்த அனுபவத்தை நீங்கள் பெற்றிருப்பீர்கள் அல்லவா?

ஷியாம் பெனகல்: ஆம், அந்த அனுபவம் அற்புதமானது, இதுப் போன்ற செயல் முழு வாழ் நாளில் ஒருமுறை தான் கிட்டும். மிக கடினமானதும் கூட. பாத் ஏக் கோஜ் உருவாக்கியதில் எனக்கு தனித்துவமான அனுபவம் கிட்டியது. ஏனெனில், அது நமது வரலாற்றை புரிந்து கொள்ள உதவியது. மற்றவர்களுக்காக நான் உருவாக்கிய இத்தொடரின் மூலம் எனது அனுபவத்தினை நான் பயின்றேன். வரலாற்றை பயில்வதென்பதை காட்டிலும் வரலாற்றைப் பற்றி படமெடுப்பதில் ஒரு வித சாகச உணர்வுக் கிட்டியது.

கேள்வி: கடைசியாக ஒரு கேள்வி- உங்கள் பார்வையில் கலையின் நோக்கம் தான் என்ன?

,ஷியாம் பெனகல்: கலையின் நோக்கம் பற்றி கூறுவது மிக்க் கடினம். இருப்பினும் அது வாழ்க்கைக்குள் கூர்ந்து பார்க்கவும், அனுபவங்களை பெறவும், வித்யாசமான உணர்ச்சிகளை பெறுவதற்காகவும் என்று எண்ணுகிறேன். மனதை கிளர்ந்தெடுக்கக் கூடியதாகவும், அறிவுக்குரியதாகவும், புலனுணர்வு சார்ந்த விஷயமெனவும் கொள்ளலாம். எந்த வித கலைப்படைப்பின் ஆக்கமும் குறிப்பிடத்தக்க உள்ளுணர்வில் இயங்கும் ஆளுமையை கொண்டதாகும்.

தமிழில்: க. செண்பகநாதன்.